மதுரை,நவ.13: தூத்துக்குடியை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் பிளஸ் 2 படிக்கும்போது டர்வின் என்பவர் என்னை ஒருதலையாக காதலித்தார். பிளஸ் முடித்து நான் கோவை தனியார் கல்லூரியில் பிடெக் படித்தேன். அவருக்கும், எனக்கும் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் தேவாலயத்தில் 8.8.2017 ல் திருமணம் நடந்ததாக கீழூர் சார் -பதிவாளர் அலுவலகத்தில் சான்றிதழ் பெற்றுள்ளதாக கூறுகிறார்.
தகவல் உரிமை சட்டத்தில் பெற்ற தகவலில், போலி ஆவணங்கள் மூலம் திருமணம் நடந்ததாக சார் – பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து ஆலயத்தின் பங்குத் தந்தையிடம் கேட்டபோது, குறிப்பிட்ட அந்த நாளில் ஆலயத்தில் திருமணம் நடக்கவில்லை என்றும், அந்த சான்றிதழை தான் வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
திருமனம் நடந்ததாக கூறப்படும் நாளில் நான் தூத்துக்குடியில் இல்லை. கல்லூரியில் செய்முறை தேர்வில் பங்கேற்றிருந்தேன். அதற்கான ஆன்லைன் வருகை பதிவேடு உள்ளது. போலி திருமண பதிவைக் கூறி, தன்னுடன் சேர்ந்து வாழுமாறு என்னை மிரட்டுகிறார். எனவே கீழுர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட திருமண பதிவு சான்றிதழை ரத்து செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’’ இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மனுவிற்கு தூத்துக்குடி மாவட்ட பதிவாளர், கீழுர் சார் -பதிவாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 30ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.