தூத்துக்குடி,பிப்.8:
தூத்துக்குடி மாவட்டத்தில், 10 மாதங்களுக்கு பிறகு கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நேற்று முதல் தொடங்கின. அதேபோல், 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. நோய்த்தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததன் காரணமாக கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த மாதம் 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. மற்ற கல்லூரி மாணவர்களும், பள்ளிகளில் பிற வகுப்பு மாணவர்களும் தொடர்ந்து ஆன்லைன் வாயிலாகவே பாடங்களை கற்று வந்தனர்.
இந்த நிலையில் கலை, அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் அனைத்து மாணவர்களுக்கும் நேற்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்து இருந்தது. அதேபோல், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்தது. அவர்களுக்கும் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களுக்கு பின்பு வகுப்புகள் தொடங்கியதால் மாணவ, மாணவியர் மிகுந்த உற்சாகத்துடன் வந்தனர். சில கல்லூரிகளில் ஷிப்ட் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. சில கல்லூரிகளில் ஒரு நாள்விட்டு ஒரு வகுப்புகள் நடத்தும் வகையில் மாணவ, மாணவியரை பிரித்து வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.