நடிப்பு என்பது ஒரு கலை, அதற்கு பல விஷயங்கள் பொருந்திவர வேண்டும் தெய்வத்தின் அனுகிரகம் இல்லை என்றால் அது சாத்தியமில்லை. முகம், குரல், உடல்மொழி, வசனங்களை உச்சரிக்கும் அழகு, ஞாபக சக்தி, பாத்திரமாக ஒன்றிபோகும் மனம், கலை உணர்வு, எல்லா உணர்ச்சிகளையும் முகத்திலும் உடல் மொழியிலும் கொண்டுவரும் லாவகம் எல்லாம் மொத்தமாக கலந்து கிடைப்பது ஒரு வரம்.

அந்த வரம் அந்த கணேசனுக்கு கிடைத்தது, நாடகங்களில் மிக சரியாக அதை பயன்படுத்திய கணேசனுக்கு காலம் அவனை நடிகன் ஆக்கியது, அந்த புகழை கடைசிவரை காத்து நின்றான் அந்த உன்னத நடிகன். எல்லா படத்தின் வேடங்களையும் அவ்வளவு கவனமாக தத்ரூபமாக நடித்து காட்டினான், கடைசிவரை அந்த தொழில்பக்தி இருந்தது, அவனின் வெற்றிக்கெல்லாம் காரணம் அந்த அர்பணிப்பே.
முகத்தை காட்டி நடிக்க தெரியாத நடிகர்கள் மத்தியில் தன் நகத்தை கூட நடிக்க வைத்த உன்னத நடிகன். நாடகத்தமிழுக்கு சர்வதேச புகழ்பெற்றுகொடுத்த பெரும் கலைஞன் அவன். நவரசம் மட்டுமல்ல ஆய கலைகள் 64க்கும் உருவம் கொடுத்து கண்ணில் நிறுத்திய நடிகன் அவன். 64 கலைகளையும் முகத்திலே காட்டினார் அந்த மகாநடிகர். அவரின் காந்த பார்வையும், புன்னகைத்த வசீகர முகமும் எத்தனை எத்தனையோ மாமனிதர்களை உணர்வோடு காட்டிற்று,
தெய்வத்தின் கருணையினையும் அம்முகமே அப்பழுக்கற்று காட்டியது. பாசத்தின் உருக்கத்தை அதுவே காட்டிற்று. அண்ணனின் பொறுப்பையும், கடமையின் கண்ணியத்தையும் காட்டிற்று. குடிகார முகம் முதல் ஏழைகுடிமகன் வரை அது அப்படி காட்டிற்று. எந்த மன்னனும் கொடுக்காத கம்பீரத்தையும் அவன் கொடுத்தான், எந்த மத துறவியும் கொடுக்காத சாந்தமான பாத்திரத்திலும் அவன் ஜொலித்தான், எல்லா மத துறவியாக அப்படியே பொருந்தினான்.

கொடும் தீவிரவாதி முதல் கடமை தவறா காவல்துறை அதிகாரி வேடம் என அசத்தினான். வழக்கறிஞர் பாத்திரத்திற்கு இன்றுவரை பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஒரு கனவு. அந்த குட்டியானை நடையழகும், சிங்கத்தின் கர்ஜனையுமாய், புலியின் கம்பீரமுமாய் அவர் வலம் வந்த காலங்கள் தமிழ்சினிமாவின் பொற்காலங்கள்.
அவராலே தான் சிவபெருமான், கர்ணன்,கட்டபொம்மன் முதல் , முதல் மரியாதை கிராமத்து வெகுளி மனிதர் வரை கண்முன் நிறுத்தபட்டது. மகாகவி காளிதாஸில் அவன் ஆடுமேய்த்த அழகு, ஒரு கோனார் செய்யமுடியாதது, மக்களை பெற்ற மகராசியில் செய்யும் உழவு விவசாயி செய்யமுடியாதது, பிராமண வேடத்தில் அவர் சந்தியா வந்தனம் செய்யும் அழகில் அந்தணர்களே அசந்தனர்.. இவை எல்லாம் சிறுதுளிதான்.

பாகபிரிவினை படம் வந்தபின் ஒருவிழாவில் பார்த்துவிட்டு வெள்ளையன் சொன்னான், கதைக்கேற்ப ஒரு மாற்றுதிறணாளியினை டைரக்டர் நடிக்க வைத்திருக்கின்றார், அரங்கம் கை தட்டலில் அதிர்ந்தது. இந்திய விடுதலை போராட்ட தலைவர்களாக வஉசி பாத்திரத்தினை காணும்பொழுது நாட்டுபற்று மேலோங்கும், அந்த வரலாறு கண்முன் வரும். சிந்துநதியின் மிசை நிலவினிலே என அந்த பாரதிபாடலில் வரும் சிவாஜிகணேசனில் மொத்த இந்தியாவையும் காணலாம், இன்றும் பாகிஸ்தானின் சிந்துநதியினை காணும்பொழுதெல்லாம் பாரதியும் கூடவே சிவாஜியும் நினைவுக்கு வராதவன் இந்திய தமிழனாக இருக்க முடியாது.
கொஞ்சம் தன் இமேஜினை காப்பாற்றிகொள்ளும் நடிகனாக, தந்திர நடிகனாக இருந்திருந்தால் இன்று ஆட்சிகட்டில் அவனுக்கு கீழேதான் இருந்திருக்கும். ஆனால் நடிப்பிற்கு துரோகம் செய்ய அவன் விரும்பவில்லை, குடிகாரன் முதல் சிகரெட் வரை கையிலேந்தி நடித்தான், பெண் பித்தனாக , கோமாளியாக , இரக்கமில்லாதவானாக கூட நடிக்க அவனுக்கு தயக்கமே இல்லை.
காரணம் அது அவன் வணங்கிய தொழில். அதுதான் அவனின் திரை பலம் மற்றும் ஒரே அரசியல் பலவீனம் ஆசிய ஆப்ரிக்க படவிழாவில் அவன் கொண்டாடபட்டான், அமெரிக்காவில் ஒருநாள் மேயராக அமரவைக்கபட்டான், சோவியத் யூனியன் அவனை உலகின் மிகசிறந்த கலைஞரில் ஒருவன் என்றது. அன்றைய உலகின் நடிப்பு சக்கரவர்த்தி மார்லன் பிராண்டோ வாய்விட்டு சொன்னான் “என்னை போல அவன் எளிதாக நடித்துவிடுவானே அன்றி, அவனை போல நடிக்க என்னால் ஒருபோதும் நடிகக்க முடியாது”

அப்படிபட்ட கலைஞனுக்கு மத்திய அரசு பெரும் விருதுகள் ஒன்றையும் அளிக்கவில்லை, பின்னாளில் பால்கே விருது வழங்கினார்கள், அது எப்பொழுது பிரான்ஸ் அரசு செவாலியே விருது வழங்கிய பின் பிரான்ஸ் தூதரகம் சிரிக்கும் முன் வழங்கினார்கள், இது அரசியல், விட்டுவிடுங்கள் பராசக்தி முதல் முதல்மரியாதை வரை அவர் நடித்த படங்கள் காலத்தால் அழியாதவை. எத்தனை எத்தனை வேடங்கள் எத்தனை அற்புதமான நடிப்பு?
ஸ்டைல் எனப்பதும் ஒருவித தனித்துவத்திலும் அவர்தான் முன்னோடி, கவனித்துபார்த்தால் ரஜினி எல்லாம் பிச்சை எடுக்கவேண்டும். ஆலயமணி, திருவிளையாடல், மகாகவி காளிதாஸ் போன்ற படங்களில் நடையிலே பல நடை காட்டியவன். அட நடை என்ன நடை சிகரெட் குடிப்பதிலே பல ஸ்டைல் காட்டினான், அதுதான் கிளாசிக். அந்த பலவகை வசன உச்சரிப்பிற்கும் அவர்தான் இலக்கணம். மிகசிறந்த வில்லன் நடிகரும் கூட, அந்நநாள் எனும் படத்தினை விடுங்கள், பாசமலரிலும், ஆலயமணியிலும் வந்துபோகும் சிலநொடி வில்லத்தனமான முகம் நம்பியார் அப்பட்டமாக தோற்குமிடம்.
இன்று என்னமோ நடிகர் நடிகைகளுக்குள் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் பயாலஜி என என்னவெல்லாமோ சொல்கின்றார்கள், ஆனால் மிக்சிறந்த கெமிஸ்ட்ரி இருந்தது என்றால் அது சிவாஜிக்கும் பத்மினிக்குமான கெமிஸ்ட்ரி. ஹிஸ்டாரிக்கல் கெமிஸ்ட்ரி. மகா திறமையான நடிகன். ஆனால் ஒரு வட்டத்திற்குள் அடைத்துகொண்டது தமிழ் திரையுலகம். அதுதான் இங்குள்ள பெரும் சிக்கல். ரஜினி தவிப்பதும், கமல் கை பிசைவதும் அப்படித்தான். அதாவது உனக்கு இதுதான் பாதை, இப்படித்தான் நீ நடிக்கவேண்டும் இல்லாவிட்டால் அவ்வளவுதான் எனும் மாதிரியான நிலை.

அப்படித்தான் உருக்கமான பாத்திரங்களில் நடித்த சிவாஜி பின்னாளில் சிக்கிகொண்டார். இதனை கேரள இயக்குநர் ஒருவன் சொன்னான். “சிவாஜி எனும் யானையினை பட்டினி போட்டு கொன்ற பாவம் ஒருநாளும் தமிழக திரையுலகினை விடாது” இதனைத்தான் அவன் இறந்த அன்று உலகமே சொல்லிற்று.
ஆயிரம் கவிஞர்கள் தமிழில் இருந்தாலும் கம்பனின் இடம் என்றுமே நம்பர் 1. அவனின் வர்ணனைகள் அப்படியானவை, தமிழுக்கோர் அடையாளம் அது, அழகு அது. அதனால்தான் இன்றுள்ள மூளை கிறுக்குள்ள முன்,பின்,இடை,கடை நவீனத்துவ கவிஞர்களை எல்லாம் நம்மால் கவிஞர்கள் என சொல்லவே முடிவதில்லை, மார்டர் ஆர்ட் எனப்படும் பயித்தியகார ஓவியங்களுக்கும் ரவிவர்மனின், மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியங்களுக்கும் வித்தியாசமில்லையா? கம்பனின் இடம் அப்படியானது.

சிவாஜி இறந்த அன்று , இறுதி ஊர்வலத்தில் மரத்தில் இருந்து ஒருவன் கத்தினான், “ஒரே ஒரு நடிகன் இருந்தான் அவனும் செத்துவிட்டானே…” என ஒரு திசைபார்க்க கத்திகொண்டிருந்தான் அவன் கத்திய திசையில் இன்றைய இம்சைகள் எல்லாம் நடந்துகொண்டிருந்தன.
தமிழ் உள்ள காலம் வரை கம்பன் நிற்பது போல, தமிழ்திரை உள்ள காலம் வரை சிவாஜி கணேசன் நிலைத்து நிற்பார் தலைமுறைகளை தாண்டி காலங்கள் மாற மாற ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையும் மாறும் மகனாக அண்ணனாக இருந்த வாழ்வு , மாணவனாக, பணி செய்பவனாக, காதலனாக கணவனாக தகப்பனாக தாத்தாவாக மாறிகொண்டே இருக்கும். வாழ்வின் சூழலும் குதூகலம், சிரிப்பு, கொண்டாட்டம், அழுகை,துரோகம், வலி, கண்ணீர், விரக்தி ,பிரிவு, மகிழ்ச்சி என மாறி கொண்டே இருக்கும்

அந்த ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு சிவாஜிகணேசன் படம் உங்களுக்கு பிடிக்கும், ஆம் கவனித்து பாருங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்துக்கும் அவர் உங்கள் கண்முன் உங்களையே நிறுத்துவார். அதுதான் அந்த நடிகனின் மகா உன்னத வெற்றி. கருணாநிதியின் வசனம் குறை சொல்லமுடியாதது ஆனால் அவர் எழுதிய 80 படங்களில் நிலைத்தது எது? பராசக்தியும் மனோகராவுமே. ஆம் சிவாஜி இல்லையென்றால் பராசக்தி என்பது பத்தோடு பதினொன்றாகியிருக்கும், பின்னாளில் கருணாநிதியின் பகுத்தறிவு வசனங்கள் நிலைக்காமல் போனதற்கு அதுதான் காரணம் பராசக்தியின் வெற்றி சிவாஜியின் வெற்றி.

மகாகவி காளிதாஸ் படமெல்லாம் முற்பாதியிலும் பிற்பாதியிலும் ஒரே நடிகனா எனும் வியக்கும் அளவுக்கு நேர்த்தி.. பாசமலரில் காட்டிய முகபாவமும் உடல்மொழியும் இன்னொரு நடிகனுக்கு சாத்தியமில்லை, கட்டபொம்மன் பட பிசிறில்லா வசனமும், கவுரவம் ஆண்டவன் கட்டளை போன்றவற்றின் அந்த நளினனும் இன்னொரு நடிகனுக்கு சாத்தியமில்லை. கடவுள் வேடங்களில் அவன் நின்ற அளவு இன்னொரு தெய்வீக கம்பீரம் இன்னொருவனுக்கு வராது.
பல படங்களில் அவரின் வேடம் மறுபடி மறுபடி ரிபீட் ஆனது , பாசமலரின் அண்ணன் வேடமே படிக்காதவனில் வந்தது, படிக்காத மேதையில் வீட்டைவிட்டு விரட்டபட்டது போல படையப்பாவிலும் விரட்டபடுவார். ஆனால் அந்த நடிப்பு மறுபடிவராமல் நுண்ணிய தனித்துவம் காட்டினார், அதுதான் நடிப்பு அவன் தான் நடிகன். .அந்த காளிதாசன் பாத்திரத்தில் சிவாஜி சொல்வார்.

“பொன்னல்ல பொருளல்ல புவியாளும் மன்னர்தரும் எண்ணவிலா மரியாதை எதுவுமல்ல மின்னிவரும் மெய்கவியின் சொல்லழகை காண்போர்தம் கண்ணில் வரும் ஒரு துளியே கவிஞனுக்கு பல கோடி..” ஆம் ஒரு கலைஞன் என்பவன், அவன் எழுத்தாளனோ நடிகனோ பாடகனோ இசைவித்வானோ எவனாக இருந்தாலும் அவன் பணத்துக்காக ஏங்குபவன் அல்ல, புகழுக்காகவும் திரிபவன் அல்ல.
அவன் எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு அங்கீகாரம், அவன் மனதில் ஊறும் வித்தைக்கான அங்கீகாரம், தன் கலைபடைப்பை அணு அணுவாக ரசிப்பவர் ஒன்றையே அவன் விரும்புவான் கலைஞனின் கலையினை ரசிக்கும் ரசிகன் கொடுக்கும் ஒரு துளி ஆனந்த பிரவாக கண்ணீர் அவனுக்கு பல்லாயிரம் கோடிக்கு சமம்.

எந்த கலைஞன் ரசிகனை உருக்குகின்றானோ தன் கலையால் கட்டிபோடு அழவைக்கின்றானோ அவனே மகா உன்னத கலைஞன். அவ்வகையில் சிவாஜிகணேசன் எல்லா தலைமுறையும் ரசித்துகொண்டே இருக்கும் மகா உன்னத கலைஞன், என்றும் அவன் படத்தை காண்போர் ஒரு துளி கண்ணீர் சிந்தி கைதட்டிவிட்டு எழாமல் இருக்க முடியாது. இன்று அந்த மனா உன்னத கலைஞனுக்கு நினைவு நாள், தமிழ் நாடக உலகம் இருக்கும் வரை அவன் வாழ்வான். Stanley Rajan