தருவைகுளத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகு பாறையில் மோதி விபத்து சிக்கியது. அதில் பயணம் செய்த 9 பேர்களையும் கடலோர காவல்படையினர் மீட்டனர்.
தருவைக்குளத்தைச் சேர்ந்த அந்தோணி ஜெயராஜ் மகன் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு நேற்று (25.07.2020) இரவு கிளம்பியது. தருவைக்குளம் கடற்கரையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு மீன்பிடித் தொழிலுக்காக சென்றுகொண்டிருக்கும் போது இன்று (26.07.020) அதிகாலை சுமார் 04.30 மணிக்கு மண்டபம் அருகில் சென்றது. அப்போது எதிர்பாராமல் அங்குள்ள குருசடை தீவு அருகில் உள்ள பாறையில்மோதி விபத்துக்குள்ளானது. படகிற்குள் தண்ணீர் புகுந்து கொண்டிருந்து. மண்டபம் பகுதி மீனவர்களுக்கு தகவல் தெரிந்து அவர்கள் படகில் உள்ளவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற கடலோர பாதுகாப்பு படையினர் படகில் சென்றிருந்த சந்திரசேகர் (வயது 42), ஜெயசீலன் (42), மாரியப்பன் (40), தங்கராசு (30), மாடசாமி (44), ராம்(32), சிலுவை (49), தர்மராஜ்(34), முருகவேல் (35) ஆகிய ஒன்பது பேர்களையும் மீட்டனர்.