தமிழகத்தில் திரைப்பட படப்பிடிப்புகள் நடத்துவதற்கு அனுமதி தர வேண்டும் என செய்தி, விளம்பரத்துறை அமைச்சரை சந்தித்து திரைத்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத் துறைஅமைச்சர் கடம்பூர் ராஜூ வை, தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் அதன் தலைவரும், திரைப்பட இயக்குநருமான .பாரதிராஜா தலைமையில் நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளடங்கிய மனுவினை அளித்தனர். இதில், திரைப்படப் படப்பிடிப்பு நடத்துவதற்கும், திரையரங்குகளை திறப்பதற்கும் அனுமதி வழங்க வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து திரையரங்கங்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும் டிக்கெட் விலையை குறைக்க வேண்டியுள்ளதால் சினிமாத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள 8 சதவிகித உள்ளூர் வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் எனவும், தனியாக உள்ள சிறிய திரையரங்குகளை மினி ப்ளெக்ஸ் (அ) மல்டி ப்ளெக்ஸாக மாற்றுவதற்கு பெறப்படும் அனுமதியினை எளிதாக்கவேண்டும்.
திரையரங்குகளில் தற்பொழுது டிஜிட்டல் முறையில் திரைப்படங்கள் திரையிடப்படுவதால், புரொடக்ஜர் ஆபரேட்டர்-க்கு வேலை இல்லாத சூழ்நிலையில் திரையரங்குகளில்புரொடக்ஜர் ஆபரேட்டர் லைசன்ஸ் பெறவேண்டும் என்றமுறையை முற்றிலும் நீக்கவேண்டும் எனவும், கோரியுள்ளனர். இது குறித்து தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் கே.ஆர்., டி.ஜி.தியாகராஜன், சிவா, தனஞ்செயன், ராஜன், சுரேஷ்காமாட்சி மற்றும் லலித் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.