தூத்துக்குடி 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை ஜனவரி மாத இறுதிக்குள் கட்சி அறிவிக்கும் – எல்.கே.சுதீஷ் பேட்டி
தேமுதிக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் எல்.கே.சுதீஷ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில்,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வை தேமுதிக ஆதரித்தது. ஏனென்றால் நீட் தேர்வு மூலமாக மருத்துவ மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைக்கும் என்பதால் அதனை ஆதரித்து வந்தோம். ஆனால் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை அமுல்படுத்திய பிறகு நீட் தேர்வு கொண்டு வந்தால் சரியாக இருக்கும். தற்போது நீட் தேர்வு நடத்துவதை தேமுதிக எதிர்க்கிறது.
முறைகேடுகளை பொருத்தவரை மத்திய மாநில அரசு சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கை கொண்டு வருவது நல்லது தான். தேமுதிகவின் கொள்கையே அன்னை மொழியைக் காப்போம், அன்மை மொழி கற்போம் என்பதுதான். தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களுக்கு வேலைக்கு செல்லவேண்டும் என்றால் தமிழருக்கு மொழி ஒரு தடையாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்துவதன் மூலம் அதை நாம் நிவர்த்தி செய்ய முடியும்.
2021 சட்டபேரவை தேர்தலை பொருத்த வரை நடிகர் ரஜினிகாந்த் கட்சி முதலில் தொடங்கட்டும் அதன் பிறகு பார்க்கலாம். வருகிற 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை டிசம்பர் மாதத்திற்குள் செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பொருத்து ஜனவரி மாத இறுதிக்குள் கட்சி தலைமை அறிவிக்கும் என்றார்.