அமிர்தா விஷ்வ வித்யாபீடத்தில் கோகுலாஷ்டமி விழா கோலாகல கொண்டாட்டம்!

Sri Mata Amritanandamayi Devi

அமிர்தா விஷ்வ வித்யாபீடத்தில் கோகுலாஷ்டமி விழா கோலாகல கொண்டாட்டம்!

கோயம்புத்தூர், செப்.19: புகழ்பெற்ற பல்துறை நிறுவனமான அமிர்தா விஸ்வ வித்யாபீடம், அதன் வருடாந்திர கலாச்சார விழாவான கோகுலாஷ்டமி 2023 ஐ செப்டம்பர் 16 அன்று சிறப்பாக  கொண்டாடியது. 

இந்த விழா பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டும் கலந்த கலவையாக தனித்துவத்துடன் வெளிப்பட்டது. காரணம், இந்த விழாவில் மாணவர்கள் தங்கள் பங்களிப்பை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியும், அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் காட்சி படுத்தியிருந்தனர். பாரம்பரிய விழாக்களில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்த நிகழ்வு ஒரு புதிய திருப்பமாக இருந்தது. மேலும், அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடியிருப்போரின் பன்முக கலாச்சாரத்தையும்  இந்த விழா மிகச்சிறப்பாக  எடுத்துக்காட்டியது.

1997 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் நிறுவப்பட்டதில் இருந்து, பல்கலைக்கழகத்தின் சார்பு வேந்தரான சுவாமி அபயமிரிதானந்த புரி அவர்களால் தொடரப்பட்ட இந்த கோகுலாஷ்டமி விழா இன்று வரை தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த  பாரம்பரியமான விழா, மாணவர்களிடையே கலாச்சார ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஒற்றுமையை வளர்ப்பதற்கும், மேம்பட்ட அறிவைப் பெறுவதற்கும் இந்த விழா ஒரு  சக்திவாய்ந்த தளமாக செயல்படுகிறது.  இதில் பங்கு பெறும் மாணவர்கள், அவர்களின் படைப்பாற்றல் மூலமாகவும், பொறியியல் மற்றும் சிந்தனை திறன் போன்ற பல்வேறு திறன்களின் மூலமாகவும், இந்தியாவின் கலாச்சாரம் குறித்த ஆழமான நுண்ணறிவுகளைப் பெறுகிறார்கள்.

இந்த ஆண்டு விழாவில் பன்னிரண்டு குழுக்களாக அமைக்கப்பட்ட 4000 மாணவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற மாணவர்களின் கூட்டு முயற்சியால்  நமது கலாச்சாரம் மிகச்சிறப்பாக  வெளிப்பட்டது. அதுமட்டுமின்றி அமிர்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள  பசுமையான வளாகத்தினுள்  சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் முக்கியத்துவம் ஊக்குவிக்கப்பட்டதுடன், ஆண் பெண் பேதமற்ற சமத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வான  ஊர்வலத்தை தாண்டி, மாணவர்களின் பாரம்பரிய கலை திறன்கள், தற்காப்பு கலைகள் மற்றும் இலக்கிய பங்களிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று, ஸ்ரீகிருஷ்ணரை  மையமாக வைத்து, கதை சொல்லுதல், நடனம், இசை, நாடகம், வினாடி வினா, பேச்சு, ஓவியம் மற்றும் கோலம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர்.

கல்வி மற்றும் ஆராய்ச்சி உலகில் கலங்கரை விளக்காக திகழும் அமிர்தா விஸ்வ வித்யா பீடம், ஹார்வர்டு, கொலம்பியா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள் போன்ற உலகளாவிய மதிப்புமிக்க நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.  புகழ்பெற்ற மானுடத் தலைவரான ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவியின் (அம்மா) வழிகாட்டுதலின் கீழ் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம்  கல்வி, ஆராய்ச்சி மற்றும் கருணை சார்ந்த  கொள்கைகளை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.