தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Tuty sivan kovil

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரதிபெற்ற அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 7 மணிக்கு கொடிபட்டம் வீதி உலா நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மூலஸ்தானம் முன்பு உள்ள கொடிமரத்தில் கலச கும்பங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் ஓத, கொடிமரத்தில் செல்வம் பட்டா் தலைமையில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். 7ம் நாள் விழாவில் சாமி, அம்பாள் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் சப்பர வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு வெள்ளை சாத்தி அலங்காரத்தில் சப்பர வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 8-ம் திருநாளான அன்று பச்சை சாத்தி அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 10ம் தேதி(சனிக்கிழமை)நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் நாட்டிய நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
கொடியேற்றம் நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத் தலைவர்கள் கந்தசாமி, செந்தில்குமாா், செயல் அலுவலர் தமிழ் செல்வி, ஆய்வாளர் ருக்மணி, அறங்காவலர்கள் ஆறுமுகம், சாந்தி, ஜெயலட்சுமி, பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளா் கங்காராஜேஷ், மாநகர சுற்றுச்சூழல் அணி இணை அமைப்பாளர் வேல்பாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன், சண்முகம் உள்ளிட்ட அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.