பெஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இந்திய அரசுக்கு எதிராக பேசுவோர் தேச விரோதிகளே - நயினார் நாகேந்திரன் காட்டம்
bjp

பெஹல்காம் தாக்குதலில் இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை தேச விரோதிகள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும் என தூத்துக்குடியில் பாஜக மாநிலத்தலைவர் நயினார்நாகேந்திரன் கூறினார்.
சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் தேசியத் தலைவர்களை மரியாதை நிமித்தமாக டெல்லியில் சந்தித்தேன். அப்போது கட்சி மற்றும் பூத் கமிட்டியை பலப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். தமிழகத்தில் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப தமிழகத்தில் இரு அமைச்சர்கள் பதவி விலகியிருப்பது வரவேற்கத்தக்கது.
பாகிஸ்தானில் உள்ளவர்கள் கூட, தங்களுக்கு பாகிஸ்தான் வேண்டாம் என்றும் மோடி வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால், பெஹல்காம் விவகாரத்தில், இந்தியாவில் இருந்து கொண்டு நம் நாட்டுக்கு எதிராக பேசி வரும் அரசியல்வாதிகளை தேச விரோதிகள் என்று தான் சொல்லவேண்டும்.
தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுகவை வீழ்த்த தவெக உள்பட அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற ஓரணியில் திரள வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகும்.
காலனி என்ற வாக்கியத்தை அரசு நீக்கியுள்ளது நல்ல விஷயம்தான். அதேபோன்று, இன்னும் நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். குறிப்பாக, தமிழகம் முழுவதும் டிஆர்பி தேர்வு எழுதி விட்டு சுமார் 50 ஆயிரம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் செய்யப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால், இதுவரை செய்யவில்லை. மேலும், தமிழகத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருட்கள் நடமாட்டத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.