சந்தையில் மிளகு தான் கருப்பு தங்கம்! - விஞ்ஞானி கண்டியப்பன் பேச்சு

isha

சந்தையில் மிளகு தான் கருப்பு தங்கம்!  -  விஞ்ஞானி கண்டியப்பன் பேச்சு

சந்தையில் மிளகு தான் கருப்பு தங்கம் என்று கடலூரில் நடைபெற்ற காவேரி கூக்குரல் கருத்தரங்கில் விஞ்ஞானி கண்டியப்பன் பேசினார்.

ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் 'லட்சங்களை அள்ளித்தரும் சமவெளியில் மிளகு சாத்தியமே' எனும் மாபெரும் கருத்தரங்கு கடலூரில் இன்று (28-04-2024) நடைபெற்றது. இக்கருத்தரங்கில்  சந்தையில் மிளகின் மதிப்பு கருதி அதை கருப்பு தங்கம் என அழைப்பதாக பெருமிதத்துடன் கூறினார். 

மலை சார்ந்த இடங்களில் மட்டுமே விளையும் என்று அனைவராலும் அறியப்பட்ட மசாலா பயிர் வகையான மிளகு, சமவெளியிலும் சிறப்பாக விளையும் என்பதை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மிளகு சாகுபடி குறித்த கருத்தரங்கை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் நடத்தியது. 

இக்கருத்தரங்கு கடலூர் மாவட்டம் பன்ருட்டி பகுதியில் கீழ்மாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள முன்னோடி விவசாயி திரு. திருமலை அவர்களின் தோட்டத்தில் நடைப்பெற்றது. இதில் வேளாண் விஞ்ஞானிகள், முன்னோடி மிளகு விவசாயிகள், புதிய ரக மிளகை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றவர்கள் எனப் பல வல்லுநர்கள் கலந்து கொண்டு மிளகு சாகுபடி குறித்த பலத் தகவல்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர். 

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் சேர்ந்த முதன்மை விஞ்ஞானி டாக்டர். கண்டியண்ணன் அவர்கள் 'சமவெளியில் மிளகு நடவு முதல் அறுவடை வரை" என்பது குறித்து பேசுகையில் "மிளகின் மதிப்பு கருதி அதை கறுப்பு தங்கம் என அழைப்பார்கள். சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றில்  உணவு மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் துறையில் மிளகிற்கான தேவை அதிகமாக இருப்பதால் அதன் வருங்கால சந்தை வளர்ச்சி 8.20 % ஆக அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

சத்குரு அவர்கள் மரம் வளர்ப்போம், மண் காப்போம் மழை பெறுவோம் என முன்மொழிந்த நோக்கம் மிக அவசியமானது. அதனை தொடர்ந்து இன்று தமிழகத்தில் மொத்தம் 17 மாவட்டங்களில் மிளகு உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே ஜாதி, மதம், இனம், அரசியலை கடந்து அந்த நோக்கத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்.” எனக் கூறினார்.

முன்னதாக புதுக்கோட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில் இருந்து நேரலையில் பேசிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் "தற்சமயம் தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் மட்டும் தோட்டக்கலை துறை சார்பாக, விவசாயிகளுக்கு மிளகு செடிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தமிழக அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் இணை இயக்குனர் திரு. கனக திலீபன் அவர்கள் "மிளகை எளிமையாக ஏற்றுமதி செய்வது ஏப்படி?" என்ற தலைப்பில் விரிவாக பேசினார். இவருடைய பேச்சு கருத்தரங்கு நடைபெற்ற மற்ற மூன்று இடங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

மிளகு சாகுபடியில் முன்னோடி விவசாயியான திரு. திருமலை அவர்கள் "பனை மரத்தில் மிளகு சாத்தியம் என்பது குறித்து பேசினார்.  மேலும் மிளகு சாகுபடியில் முன்னோடி விவசாயியான திரு. பூமாலை "மிளகு விற்பனையில் சாதிப்பது எப்படி?" என்பது குறித்து பேசினார். 

இது மட்டுமின்றி, கருத்தரங்க நிறைவுக்கு பின் பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கிருந்த பல்வேறு சந்தேகங்களை நேரில் பார்த்து கேட்டு தெரிந்து கொண்டனர். கடலூரில் நடைபெற்றது போலவே புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் பொள்ளாச்சியில் இக்கருத்தரங்குகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.