மத்திய அரசின் வீர் கதா கவிதை போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக மாணவி - கவிதையில் மத்திய அமைச்சர்கள் கையெழுத்திட்டு பாராட்டு

FIRST STUDENT

மத்திய அரசின் வீர் கதா கவிதை போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக மாணவி  - கவிதையில் மத்திய அமைச்சர்கள் கையெழுத்திட்டு பாராட்டு

மத்திய அரசின் வீர் கதா கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற  தூத்துக்குடி பி.எம்.சி பள்ளி மாணவி டிவைனா எழுதிய கவிதையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோர் கையெழுத்திட்டு மாணவியை பாராட்டி கௌரவ படுத்தியுள்ளனர்.

மத்திய அரசு வீர தீர விருதுகள் பெற்ற வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறியவும், மாணவர்கள் மத்தியில் அவர்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கடந்த 2021 வீர் கதா என்னும் திட்டத்தை துவங்கியது.  இதை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம், கல்வி அமைச்சகம், பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு இணைந்து வீரர் கதை  என்ற திட்டத்தினை துவங்கி நடத்தி வருகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மூன்றாவது ஆண்டாக நடந்த வீர் கதா 3.0 போட்டியில் நாடு முழுவதும் உள்ள 2. 43 லட்சம் பள்ளிகளை சேர்ந்த 1.37 கோடி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட,  மாநில மற்றும் தேசிய அளவில் மாணவர்களின் படைப்புகள் பரீசீலிக்கப்பட்டு 100 மாணவர்களின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.பத்தாயிரம் ரொக்க பரிசம், டெல்லியில் நடக்கும் குடியரசு தின அணி விழாவை பெற்றோருடன் நேரில் சென்று பார்வையிட மத்திய அரசு செலவில் விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு ஸ்டார் ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.  

இதில் தமிழ்நாட்டில் இருந்து தூத்துக்குடி பி.எம்.சி பள்ளியில் பிளஸ் டூ பயின்று வரும் புதுக்கோட்டையை சேர்ந்த தினேஷ் ராஜதிவ்யா ஆகியோரின் மகள் மாணவி டிவைனா வீர மங்கை ராணி லட்சுமி பாய் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய கவிதை தமிழக அளவில் முதலாவதாக தேர்வு செய்யப்பட்டது. தேசிய அளவில் சாதனை படைத்த மாணவி டிவைனாவை பி எம் சி பள்ளி தாளாளர் சுகுமார், நிர்வாகி ஜான் ஜோசப் கென்னடி, முதல்வர் பால்கனி, துணை முதல்வர் ஜென் மேத்யூ மற்றும் ஆசிரியர்கள் உடன் பயிலும் மாணவ மாணவிகள் பாராட்டினார்.

 

இதை அடுத்து நேற்று டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவிற்கு மாணவி டிவைனா  அவருடைய தாத்தா புதுக்கோட்டைராஜா ஸ்டாலின் ஆகியோருடன் சென்றார்.  விருது பெற்ற மாணவி டிவைனாவை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் அவரது கவிதை பேப்பரில் கையெழுத்திட்டு வாழ்த்தி பாராட்டி கௌரவித்தனர். கடந்தவர்கள் நேற்று நடந்த குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டு அணிவகுப்பை பார்வையிட்டனர்.