ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் நாளை “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் - தங்கி கள ஆய்வு செய்கிறார் ஆட்சியர்

thoothukudi collector

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் நாளை “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் - தங்கி கள ஆய்வு செய்கிறார் ஆட்சியர்

பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் சேவைகள் தங்குதடையின்றி மக்களிடம் சென்றடைவதை உறுதிசெய்யும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு நாள் தங்கி முகாமிட்டு கள ஆய்வு மேற்கொள்ளும்  “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் நடைபெற உள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழக முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் நாளை 21.02.2024 மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தங்கி முகாமிட்டு அனைத்துறை அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து  ஆய்வு செய்ய உள்ளார்.  

மதியம் 2.30 முதல் 4.30 வரை அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி முன்பகலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட கள பயணங்கள், அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டறியும் ஆட்சித்தலைவர், அதன் பின்   ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 04.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்கிறார். தொடர்ந்து மீண்டும் நகர்ப்புறம் / கிராம ஊராட்சிகளின் பகுதிகளுக்குச் சென்று பல்வேறு அரசு துறைகளின் சேவை வழங்குதல் / திட்ட செயல்பாடுகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்படுகிறது. அன்றைய இரவு அவ்வட்டத்திலேயே அனைத்து அலுவலர்களுடன் தங்கி மறுநாளான 22.02.2024 அன்று அதிகாலை அடிப்படை வசதிகளான குடிநீர் / சுகாதாரம் / தூய்மை / போக்குவரத்து / முதல்வரின் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை ஆய்வு செய்கிறார்.    

அப்போது பொது மக்கள் தங்கள் வாழ்விட முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துக்களையும், கோரிக்கை மனுக்களையும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.