ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமாருக்கு அண்ணா விருது - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

C.M.News

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமாருக்கு அண்ணா விருது - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய தேதிகளில் பெய்த அதிதீவிர கன மழையினால் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட தாமிரபரணி ஆற்று வெள்ளம் மற்றும் காட்டாற்று வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. 

இதனில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் பணிபுரிந்து வரும் சிவக்குமார்  ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 14 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டார். மேற்படி கிராமங்களில் காவல்துறை உதவியுடன் இரவு 10.30 மணி முதல் ஒவ்வொரு வீடாக சென்று தாமிரபரணியில் வெள்ளம் வரப்போவதாகவும், உடனே வீடுகளை விட்டு வெளியேருமாறும் கூறி அவர்களை வாகனங்களில் ஏற்றி பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து சென்று தங்க வைத்தார்.  

அதிகாலை 2.30 மணிக்குள் பொதுமக்கள் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினார். அதன் பிறகு தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்களை மூழ்கடித்தது. ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 1646 வீடுகள் வெள்ளத்தினால் இடிந்துவிட்டபோதிலும், தக்க சமயத்தில் தகவல் தெரிவித்து மக்கள் வெளியேற்றப்பட்டதால் அதிகமான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது. 

மேலும் அவர்  நேரடி தீவிர கண்காணிப்பில் சுமார் 2400 பேர் மீட்கப்பட்டனர். கடந்த 17.12.2023 தேதியன்று திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட மேலும், வெள்ளத்தினால் செந்தூர் எக்ஸ்பிரஸ், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது. வெள்ள பாதிப்பில் இருந்து பயணிகளை மீட்க கடும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இந்நிலையில் இரு தினங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் இருந்த பயணிகளை ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார் பெரும் வெள்ளத்திலும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார் பணியினை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியதோடு தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்டது. 

இந்நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கும் வெள்ளத்தின்போது உதவிய ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார் தமிழ்நாடு அரசின் வீரதீர செயலுக்கான அண்ணா விருதினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் வழங்கினார், விருது பெற்ற ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமாருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.