தூத்துக்குடி மையவாடியில் ஜாமினில் வந்தவர் தலை துண்டித்து கொலை - பழிக்கு பழியா நடந்த சம்பவம்

murder

தூத்துக்குடி மையவாடியில் ஜாமினில் வந்தவர் தலை துண்டித்து கொலை - பழிக்கு பழியா நடந்த சம்பவம்

தூத்துக்குடி டிஎம்பி காலனி சலவைக் கூடத்தில் உள்ள திருமந்திரநகர் விநாயகர் கோயில் முன்பாக நேற்று காலை ரத்தக்கறையுடன் ஒரு பை கிடந்தது. இது குறித்த தகவலை அடுத்து தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்தியராஜ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம்,எஸ்ஐ சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அந்த பையில் துண்டிக்கப்பட்ட நிலையில் கொலையான வாலிபர் ஒருவரின் தலை இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அப்பகுதியில் வேறு எங்காவது தலை துண்டிக்கப்பட்ட வாலிபரின் உடல் கிடக்கிறதா என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இதில் அருகே இருந்த மையவாடியில் தலை துண்டிக்கப்பட்ட வாலிபரின் உடல் கிடந்ததை கண்டுபிடித்த போலீசார், உடனடியாக தலை மற்றும் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கொலையானவர் தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த சண்முகத்தின் மகனும், சுமை தூக்கும் தொழிலாளியுமான மாரியப்பன்(43) என்பது தெரியவந்தது. இவர் கடந்த ஏப்.23ம் தேதியன்று இதே சலவைக் கூட்டத்தில் தனது நண்பரான அண்ணாநகர் முதல் தெருவைச் சேர்ந்த சப்பாணிமுத்து(42)என்பவருடன் மது குடித்தார். 

அப்போது மாரியப்பன் கழுத்தில் அணிந்து இருந்த மாலையை சப்பாணிமுத்து அறுத்ததோடு மாரியப்பனின் தாய் குறித்தும் அவதூறாகப் பேசினாராம். இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் அங்கேயே தூங்கிவிட்டனர். இந்நிலையில் பாதி தூக்கத்தில் எழுந்த மாரியப்பன் அருகில் கிடந்த கல்லை சப்பாணிமுத்து தலையில் போட்டு கொலை செய்துவிட்டு மறுநாள்(24ம்தேதி)காலை தென்பாகம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இவ்வழக்கில் கைதாகி சிறை சென்ற மாரியப்பன் அண்மையில் தான் ஜாமீனில் வெளிவந்தார். 

இதனிடையே சப்பாணி முத்துவின் கொலைக்குப் பழிக்குபழியாக மாரியப்பனை தீர்த்துக்கட்டும் பொருட்டு அவரை தீவிரமாக கண்காணித்து வந்த சப்பாணிமுத்துவின் உறவினர்கள் இன்று காலை மாரியப்பன் மையவாடி பகுதியில் வந்த போது அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் தலையை தனியாக துண்டித்த கொலையாளிகள், ஏற்கனவே சப்பாணிமுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த சலவை கூடத்தில் உள்ள கோயில் முன்பாக தலையை போட்டு சென்றது தெரியவந்தது. 

இது தொடர்பாக சப்பாணிமுத்துவின் உறவினர் உள்ளிட்ட இருவரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.