வீட்டுக்குள் தாய் உடலை புதைத்த மகன் - தூத்துக்குடி அருகே சம்பவம்

crime

வீட்டுக்குள் தாய் உடலை புதைத்த மகன் - தூத்துக்குடி அருகே சம்பவம்

தூத்துக்குடி அருகே அய்யனடைப்பு சிவசக்தி நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் ஜெய்னும் குலாப்தீன். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டிரைவரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துபோனார். அவரது மனைவி ஆஷா பைரோஸ் (46), மகன் முகமது குலாம் காதர் (22) ஆகிய இருவர் மட்டும்  அவர்களது வீட்டில் வசித்து வந்தனர். மகன் முகமது குலாம் காதர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் வேலைக்கு எதுவும் செல்வதில்லையாம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஷா பைரோஸ் திடீரென இறந்திருக்கிறார். ஆனால், இந்த தகவலை முகமது குலாம் காதர் யாருக்கும் தெரிவிக்காமல், அவரே வீட்டிற்கு பின்புறம் சிறிய சிமென்ட் தொட்டி ஒன்றை கட்டி அதில் தாயின் உடலை போட்டு மண்ணால் மூடிவிட்டார். அதற்கு இரண்டு நபர்கள் உதவியிருக்கின்றனர். அதன் பிறகு அத்தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. எதோ விபரீதம் நடந்திருக்கிறது என உணர்ந்த அக்கம் பக்கத்தினர் சிப்காட் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்க்கும் போது, ஆஷா பைரோஸ் உடல் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

அது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த 2ம் தேதி ஆஷா பைரோஸ் இறந்ததாகவும், இரண்டு மூன்று நாள் கழித்து வீட்டிற்கு பின்புறம் சிமெண்ட் தொட்டி கட்டி அதில் அவரது உடலை புதைத்ததாகவும் அவரது மகன் முகமது குலாம் காதர் தெரிவித்தார். வீட்டில் இருந்து ஆஷா பைரோஸ் உடலை தொட்டி வரை இழுத்துச் சென்ற தடயம் இருப்பதை பார்த்த போலீசாருக்கு, ஆஷா பைரோஸ் சாவில் மர்மம் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே நாளை(வியாழக்கிழமை) காலை தாசில்தார் மற்றும் அரசு மருத்துவர்கள் முன்னிலையில் ஆஷா உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனைக்கு பின்பு ஆஷா பைரோஸ் இறந்தது எப்படி? என்பது தெரியவரும் என்கிறார்கள் போலீசார்.