மாதா சிலையால் அடித்து கொன்றிருக்கிறார்கள்.. இதுபோன்ற பாதிரியார்களை எப்படி இறைவனின் தூதுவர்கள் என்று கூறுவது - குமரியில் கொதித்த சீமான்

seeman

மாதா சிலையால் அடித்து கொன்றிருக்கிறார்கள்.. இதுபோன்ற பாதிரியார்களை எப்படி இறைவனின் தூதுவர்கள் என்று கூறுவது - குமரியில் கொதித்த சீமான்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே மயில் ரோடு பகுதியில் ஆர்.சி கிறிஸ்தவ தேவாலயம் இருக்கிறது. இந்த தேவாலயத்தில் உள்ள பங்கு தந்தை அலுவலகத்தில் கடந்த 20ஆம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், அரசு போக்குவரத்து கழக ஊழியருமான சேவியர் குமார் என்பவர் அடுத்து கொலை செய்யப்பட்டார். 

இந்த கொலை வழக்கில் திமுக தக்கலை ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, மைலோடு கிறிஸ்தவ தேவாலய பங்கு தந்தை ராபின்சன் உட்பட 15 பேர் மீது இரணியல் காவல்நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பாதிரியார் ராபின்சன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நேற்று முன்தினம் கல்குளம் தாசில்தார் தலைமையில் போலீசார் சேவியர்குமார் உடலை நீதிமன்ற ஆணைப்படி மைலோடு கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர். திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு தலைமறைவாக உள்ளார். 

இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட சேவியர் குமார் வீட்டுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்றார். சேவியர் குமாரின் கல்லறையில் அஞ்சலி செலுத்துடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். சேவியர் குமாரின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான திமுக ஒன்றிய செயலாளர்  ரமேஷ் பாபு உட்பட கொலையாளிகளை கைது செய்வதில் காவல்துறை தாமதம் காட்டுவதாக குற்றம் சாட்டி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் சீமான் கலந்து கொண்டார். இதில் தமிழக அரசையும், காவல்துறையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.  

அப்போது சீமான், கொலை நடந்த இத்தனை நாட்களாகியும் அரசு மெத்தனமாக உள்ளது. தேவாலயத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அடித்துக் கொலை செய்துள்ளனர். அது சம்பந்தபட்ட தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மாதா சிலையால் அடித்து கொன்றிருக்கிறார்கள். இதுபோன்ற பாதிரியார்களை எப்படி இறைவனின் தூதுவர்கள் என்று கூறுவது. சரணடைந்த பாதிரியார் ராபின்சனை  போலீசார் இதுவரை விசாரிக்கவில்லை. காவல்துறை ஏன் இன்னும் கொலை சம்பவமாக அறிக்கை வெளியிடவில்லை, பேசுவதற்கெல்லாம் குண்டாஸ் போடுகிறது அரசு, கொலைக்கு என்ன தண்டனை.. இவ்வளவு பெரிய உளவுத்துறை, காவல் துறையை வைத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார் என சொல்ல அதிகாரம் தேவையா.. என்ன கொடுமை இது. குற்றவாளி தலைமறைவாகிவிட்டார் என்று கூறுவதற்கு வெட்கமாக இல்லையா... அவர் திடீரென காணாமல் போக மந்திரவாதியா... 

இந்த கொலைக்கு திமுக துணை போகிறது என்று கூறுவதை விட குற்றம் செய்தவர்களே திமுக -வினர்தானே. அவர்கள் கட்சிக்காரர்களை, நான் கொலை செய்தால் அடுத்த நொடி கைது செய்ய மாட்டார்களா... தமிழகத்தில் சட்டம் இருக்கிறது. ஆனால் ஒழுங்காக இருக்கிறதா... ஒழுங்கா இருந்தால் இதெல்லாம் நடக்குமா... அதிகாரத்தில் இருப்பவர்கள் காப்பாற்றுவார்கள் என்ற அச்சமின்மை. எளிய மக்கள் என்ன பண்ணுவார்கள் என்று திமிர் தான் இந்த கொலையில் தெரிகிறது. அதன் பிறகு என்ன சட்டம் ஒழுங்கு... அவர் திமுக ஒன்றிய செயலாளர், அதுமட்டுமில்லாமல் அவர் அரசு வழக்கறிஞராகவும் இருக்கிறார். கைது பண்ணினால் கட்சிக்கு கெட்ட பெயர். எத்தனை பேரை வெட்டிக் கொன்றாலும் அவர்களை காப்பாற்ற அதிகாரம் இருக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களை அவர்கள் மறக்கலாம். ஆனால் ரமேஷ் பாபுவை நான் மறக்க மாட்டேன்’’ என்றார்