100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி - நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடந்தது

election news

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி - நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடந்தது

நாசரேத்,மார்ச்.28: வரும் பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பினை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர், கோட்டாட்சியர்  மற்றும் தாசில்தார் அறிவுறுத்தலின்படி நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சார்பில்  வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. ஆழ்வார் திருநகரி வருவாய் ஆய்வாளர் மகாதேவன் கலந்து கொண்டு  கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.பள்ளியின் தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் மற்றும் நாசரேத் கிராம நிர்வாக அலுவலர் முத்துமாலை  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணி மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி, தபால் நிலையம், கூட்டுறவு வங்கி, நாசரேத் முக்கிய தெருக்கள், ரயில் நிலையம், கிராம நிர்வாக அலுவலக பகுதி, மோசஸ் தெரு, பேராலய தெரு ஆகியவற்றில் நடைபெற்றது. பேரணியில் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் இளையோர் செஞ்சிலுவை இயக்கம், சாரணர்  இயக்கம்,தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம்  மற்றும் சாலை பாதுகாப்பு படை பிரிவு மாணவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம்  ஜெபராஜ் வாக்காளர்களின் கடமை, வாக்களிப்பதின் அவசியம், முதன்முறை வாக்களிக்க கூடிய இளம் வாக்காளர்களின் பொறுப்பு ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்.  

வாக்கு நமது உரிமை, வாக்களிப்பது நமது கடமை, வாக்களிப்பதில் உறுதி கொள்ளுங்கள், வாக்களித்து உறுதிப்படுத்துங்கள் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டு மாணவர்கள் பேரணியாக சென்றனர். நாசரேத் நகர காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பேரணிக்கான ஏற்பாடுகளை  வாக்காளர் மைய பொறுப்பாளர் தனபால் செய்திருந்தார். உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர் ஆசிரியர்கள் ஜெய்சன் சாமுவேல், ஜெய்சன் பாபு, எட்வின், ஜென்னிங்ஸ் காமராஜ், அலெக்சன் கிரிஸ்டோபர், கிராம உதவியாளர்கள் கண்ணன் மற்றும் முருகப்பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.