தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள அம்மா உணவகத்தில் மாலை நேரத்திலும் உணவு கிடைக்க ஏற்பாடு.!

Amma Unavagam

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள அம்மா உணவகத்தில் மாலை நேரத்திலும் உணவு கிடைக்க ஏற்பாடு.!

ஆஸ்பத்திரிகளில் நாள் கணக்கில் சிகிச்சையில் இருப்போருக்கும், அவருடன் உதவிக்காக இருப்போருக்கும் உதவும் வகையில் தமிழகம் முழுவதும் கடந்த 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. அது படிப்படியாக ஆஸ்பத்திரி பகுதிகளையும் தாண்டி பஸ்ஸ்டாண்டு உள்ளிட்ட பொது இடங்களுக்கு அருகிலும் விரிவு செய்யப்பட்டது. இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு என குறைந்த விலையில் உணவு விற்கப்படுவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சியிலும் அம்மா உணவு திட்டம் தொடர்கிறது. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். தூத்துக்குடி மாநகர பகுதியில் 10 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் வழக்கம்போல் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளும் மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை பார்வையிட சென்றிருக்கிறார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவர்களின் உறவினர்கள், இந்த அம்மா உணவகத்தில் காலையிலும், மதியமும் உணவு வழங்குவதுபோல் மாலையிலும் உணவு வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டனர். இதனை கேட்ட மேயர், உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதியளித்தார். அம்மா உணவகங்களுக்கு நிதி ஏற்பாடு செய்வது, அதனை பராமரிப்பதுயெல்லாம் மாநகராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு என்பதால் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த மேயர்,அரசு மருத்துவமனை முன்பு உள்ள அம்மா உணவகத்தில் மட்டும் மாலை நேரத்திலும் உணவு வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். முதல் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள அம்மா உணவகத்தில் குறைந்த விலைக்கு உணவு கிடைக்கும். இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவியாக இருப்போர் பயனடைகின்றனர்.   
இது குறித்து மேயரிடம் கேட்டபோது, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், அவர்களுக்கு உதவியாக இருப்போருக்கு இந்த அம்மா உணவகம் பெரிதும் பயன்பட்டு வருகிறது. காலை மற்றும் மதியம் கிடைக்கும் உணவு மாலையில் இல்லையென்பதால் அவர்கள் கஷ்டப்படுவதாக கூறினார்கள். அவர்களின் நலன் கருதி, அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள அம்மா உணவகத்தில் மட்டும் மாலை நேரத்திலும் உணவு கிடைக்கும்படி ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்.