திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டனர்

Thiruchendur Murugan

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டனர்

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி என்கிற செந்திலாண்டவர் திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெறுவத் வழக்கம். விசாக திருநாளில் கடவுளை  வணங்கினால் ஆண்டு முழுவதும் கடவுள் அருள் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் இன்று(9.6.2025) திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. 

திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மண்க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகமும், தீபாரானையும் நடந்தது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகமும் நடந்தது. விசாக திருவிழா இன்று அதிகாலை 1.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6.00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. 

காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. தொடந்து சுவாமி ஜெயந்திநாதர் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும், அதேபோல் பல்வேறு பகுதியில் இருந்து பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்திருக்கின்றனர். 

ஏற்பாடுகளை கோயில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.