முதியோர் இல்லத்தில் இறக்கும் தாய், தந்தை உடலை வாங்கும் மனநிலையில் கூட பிள்ளைகள் இல்லை. - அமைச்சர் கீதாஜீவன் வருத்தம்

Anbu Ullangal

முதியோர் இல்லத்தில் இறக்கும் தாய், தந்தை உடலை வாங்கும் மனநிலையில் கூட பிள்ளைகள் இல்லை.    - அமைச்சர் கீதாஜீவன் வருத்தம்

தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளியில் உள்ள அன்பு உள்ளங்கள் என்கிற முதியோர் காப்பகத்தில் பொதுநலவாதிகளின் பங்களிப்பு தொகை சுமார் 65 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதனை அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்.பி ஆகியோர் திறந்து வைத்தனர். அவர்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி இருந்தார்.

அப்போது அமைச்சர் கீதாஜீவன், ஆங்காங்கே தெருக்களில் சுற்றித்திரியும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவும் வகையில் அன்பு உள்ளங்கள் காப்பகத்தை சத்திய சாமுவேல் நிறுவி நடத்த தொடங்கினார். கலைஞர் ஆட்சியில் அவருக்கு உதவி கிடைத்தது. அதிமுக ஆட்சி வந்தபிறகு உதவிகள் நிறுத்தப்பட்டுவிட்டது. அப்போது சத்தியசாமுவேல் மிகவும் சிரமப்பட்டது எங்களுக்கு தெரியும். கலெக்டர் முதல் சமூக ஆர்வலர்கள் வரை தெருவில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை அழைத்து வந்து இங்கே சேர்த்துவிடுகின்றனர். அவர்களை மறுக்காமல் நிர்வாகி விஜயா தங்க வைத்து பராமரித்து வருகிறார். அப்படி தங்கவைக்கப்படும் வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளில் சிலர் இறந்து போனால் உறவினர்களிடம் அதனை தெரிவிக்கின்றனர். ஆனால் உறவினர்களோ, நாங்க 3 ஆயிரம் ரூபாய் தந்துவிடுகிறோம். அவர்கள் உடலை நீங்களே அடக்கம் செய்துவிடுங்கள் என்று சொல்லும் அளவிற்குதான் மனிதாபிமானம் இருக்கிறது. இறக்கும் தாய், தந்தை உடலை வாங்கும் மனநிலையில் கூட பிள்ளைகள் இல்லை. ஆனாலும் மனம் தளராது முதியோர் காப்பகத்தை நடத்தி வருகின்றனர். கஷ்டப்பட்டு புதிய கட்டிடங்களை கட்டியுள்ளனர். அது இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் நமது அரசு நிச்சயமாக இந்த காப்பகத்துக்கு உதவும் என்றார். 

இந்த நிகழ்ச்சியில் அன்பு உள்ளங்கள் முதியோர் இல்லத்தின் நிர்வாகி விஜயா சத்தியசாமுவேல், செயலாளர் தங்க தீபா, திமுக நிர்வாகிகள் ஜெயராஜ், மொபட்ராஜ், மரம்வரம் அறக்கட்டளை இயக்குநர் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.