முதியவருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

judgement

முதியவருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

குரும்பூர் அருகே விவசாயி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மேலபுதுக்குடியைச் சேர்ந்தவர் மூக்காண்டி (70).விவசாயி. இவர் கடந்த 17.12.2015 அன்று அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயபால்(67) டீ கடையில் வைத்து பீடி குடித்துள்ளார். இதனை மூக்காண்டி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 19.12.2015 அன்று மூக்காண்டி தனது சைக்கிளில் வயலுக்கு  சென்றுகொண்டிருந்தபோது, அவரை ஜெயபால் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தனர். 

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன், குற்றம் சாட்டப்பட்ட ஜெயபாலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆனந்த் கேபிரியேல் ராஜ் வாதாடினார்.