திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜுலை 7ம் தேதி கும்பாபிஷேகம் - உள்ளூர் விடுமுறை கேட்கிறது இந்து முன்னணி
Thiruchendur Murugan

திருச்செந்தூர் அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி என்கிற செந்திலாண்டவர் திருக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மஹா கும்பாபிஷேக விழா அடுத்த மாதம்(ஜூலை) 7ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக கோவிலில் நிறைய புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவில் மாவட்டங்களை தாண்டி, மாநிலங்களை தாண்டி, உலகில் பல நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபட உள்ளனர். ஆனாலும் அன்று திங்கள் கிழமை வேலைநாளாக இருப்பதால் அனைவரும் வரமுடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. அன்று உள்ளூர் விடுமுறை விடப்படுமானால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் என்று பக்தர்கள் கருதுகின்றனர். இந்தநிலையில் ஜூலை 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது : திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இத்திருக்கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7ம் தேதி(திங்கள்கிழமை)நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடங்கள் போன்ற அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் முன்கூட்டியே திட்டமிட்டு விபத்துகள் எதுவும் நடக்காமல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆங்காங்கே தற்காலிக சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணிக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.