அனைத்து அஞ்சலகங்களிலும் பொது காப்பீட்டு சிறப்பு முகாம் வரும் 30ம் தேதி வரை நடக்கிறது

Post office news

அனைத்து அஞ்சலகங்களிலும் பொது காப்பீட்டு சிறப்பு முகாம் வரும் 30ம் தேதி வரை நடக்கிறது

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் பொது காப்பீட்டு சிறப்பு முகாம் வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்டமுதுநிலை கண்காணிப்பாளர் வதக்ரவிராஜ் ஹரிஷ்சந்திரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 

இந்திய அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி மிகவும் பயனுள்ள, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள திட்டமான விபத்து காப்பீடு திட்டத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு போய் சேர்க்கும் விதமாக "Protect 360” விபத்து காப்பீடு பொது காப்பீட்டு சிறப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாள்தோறும் வேலை செய்யும் இடங்களில், வீடுகளில், பயணங்களின் போது என பல்வேறு எதிர்பாராத விபத்துகளால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இதனால் வருவாய் இழப்பு, கடன், மருத்துவ செலவு குழந்தைகளின் கல்வி, குடும்பத்தின் எதிர்காலம் என அனைத்துமே கேள்விக்குறியாகி விடுகின்றது. 

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு எதிர்பாராத விபத்துக்களால் ஏற்படும் செலவுகள் பகுதி ஊனம் நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு அனைத்துக்கும் பயனளிக்கக்கூடிய விபத்து காப்பீடு திட்டத்தை பொதுமக்களுக்கு இந்திய அஞ்சல் துறை, தனது இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வழியாக பல தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வழங்கி வருகிறது. 

இத்திட்டத்தில் 18 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட அனைவரும் தங்களை இணைத்துக் கொள்ளலாம். திட்டத்திற்கு தேவையான ஆவணங்களாக ஆதார் எண் மொபைல் எண் வாரிசுதாரரின் விவரங்களை கொண்டு வர வேண்டும். ஆண்டு ஒன்றுக்கு ரூ.559க்கு 10 லட்சம், ரூ.799க்கு 15 லட்சம் என்ற வகைகளில் இக்காப்பீட்டு திட்டத்தில் இணையலாம். 

மேலும் அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அசுரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NIACL) மற்றும் பல தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் காப்பீடு மற்றும் உடல்நலக் காப்பீட்டையும் வழங்குகின்றது. இத்திட்டங்களில் சேர தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்கள் பகுதியில் உள்ள தபால்காரர்கள் மூலமும் இத்திட்டங்களில் சேர்ந்து கொள்ளலாம். 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் இதற்கான சிறப்பு முகாம்கள்  வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்ட மக்கள் இந்த நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்தி இத்திட்டங்களில் சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகம் மற்றும் தங்கள் பகுதி தபால்காரர்களை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.