கொலையான முறப்பநாடு வி.ஏ.ஒ மகன் நீதிபதியாக தேர்வு - நேரில் சென்று வாழ்த்திய மாவட்ட எஸ்.பி

thoothukudi

கொலையான முறப்பநாடு வி.ஏ.ஒ மகன் நீதிபதியாக தேர்வு - நேரில் சென்று வாழ்த்திய மாவட்ட எஸ்.பி

முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தபோது கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் சேவியர் மகன் சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை, புதுக்கோட்டை அருகே சூசைப்பாண்டியாபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கே நேரில் சென்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் சேவியர் கடந்த 25.04.2023 அன்று கொலை செய்யப்பட்டார். இக்கொலை குற்றவாளிகள் ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர் உடனடியாக கைதுசெய்யப்பட்டனர். அந்த வழக்கில் 57 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கொலை நடந்த 143வது நாளான 15.09.2023 அன்று குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம். நீதிபதி எம். செல்வம் தீர்ப்பு வழங்கினார். தற்போது ராமசுப்பு,மாரிமுத்து ஆகிய இருவரும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிவில் நீதிபதி தேர்வு அறிவித்தது, இதில் விண்ணப்பித்த கொலையுண்ட லூர்து பிரான்சிஸ் சேவியர் மகன் மார்ஷல் ஏசுவடியான், தனது தந்தை கொலை செய்யப்பட்ட சோகத்தில் இருந்து வந்த நிலையில், தனது கடின உழைப்பாலும், முயற்சியாலும் மேற்படி தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற மார்ஷல் ஏசுவடியான் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூசைபாண்டியாபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று, அவருக்கு சால்வை அணிவித்து, அவரது பணி சிறக்கவும், மென்மேலும் வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற வேண்டுமென பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

அவருடன் தூத்துக்குடி பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் வாக்கரே அக்ஷய் அனில் மற்றும தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர் ஆகியோரும் வாழ்த்தினர்.