மண் வளத்தை காக்க ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்

isha

மண் வளத்தை காக்க ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்

மண் வளத்தை காக்க ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என ஈஷா, கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்திய மகளிர் தினக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கம், கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்திய ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.0’ கருத்தரங்கு இன்று (08/03/2026) கோவையில் நடைபெற்றது. அரசூரில் உள்ள கே.பி.ஆர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, வேளாண் சார் சுயதொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகளைப் பெற்றனர்.

இந்நிகழ்வில் கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் ராமசாமி அவர்களின் துணைவியார் கே.ஆர். பார்வதி விழாத் தலைவராகப் பங்கேற்றார். மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா வரவேற்புரை ஆற்றினார். அவனீதா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உமா சேகர் தலைமை உரையாற்றினார். 

இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக,  நுயூட்ரிஜெனிட்டிக்ஸ் ஹரிணி, அத்ரி ஹெல்த் சுபஸ்ரீ, அர்கே அக்ரோ கல்யாணி, பிரிஷிகோ நிறுவனத்தின் சிந்துஜா, ஸ்ரீ எக்ஸிம் நிறுவனத்தின் ராஜஸ்ரீ, விபிஸ் ராயல் ஹனி நிறுவனத்தின் ஜோஸ்பின் மேரி ஆகிய தமிழகத்தில் வேளாண் மதிப்புக்கூட்டல் பொருட்களை தயாரிப்பதில் சிறந்து விளங்கும் 6 சிறந்த பெண் தொழில்முனைவோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்ச்சியில் மரபின் மைந்தன் முத்தையா பேசுகையில், “சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு வழிகாட்டும் இந்நிகழ்ச்சி கே.பி.ஆர் வளாகத்தில் நடைபெறுவது மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், கே.பி.ராமசாமி,  அவர்களுக்கு சொந்தமாக இருக்கும் ஆலைகளில் பணிபுரிய வரும் பெண்களுக்கு, தொழிலையும் கற்றுக்கொடுத்து, கல்வியையும் கொடுத்து 30,000 பட்டதாரிகளை உருவாக்கி உள்ளார். 

அருளாளர்கள் என்றால் விண்ணைப் பற்றி மட்டுமல்ல இந்த மண்ணைப் பற்றியும் சிந்திப்பவர்கள் என்பதை சத்குரு நிரூபித்துள்ளார்கள். மண் வளமிக்க நாடாக நம் தேசம் மாற வேண்டும் என்பது நமக்கு கனவாக இருக்கலாம், ஆனால் சத்குருவிற்கு அது சங்கல்பம். ஈஷாவில் சத்குரு பல அசாத்திய திட்டங்களை அறிவிக்கும் போதெல்லாம், இது சாத்தியமானதா என்று நாங்கள் நினைப்போம். ஆனால் அதேநேரத்தில் அதன் செயல்பாடுகள் நடைபெற துவங்கி இருக்கும். அது தான் ஈஷாவின் சிறப்பு. மண் காப்போம் இயக்கமும் அதன் செயல்பாடுகளுமே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.” எனப் பேசினார். 

இதனைத் தொடர்ந்து, உணவு, மருத்துவம், இயற்கை விவசாயம் மற்றும் மதிப்புக்கூட்டல் துறைகளில் சாதனை படைத்த பெண் தொழில்முனைவோர்கள் தங்களது வெற்றி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 

இதில் இயற்கை பெண் விவசாயி சியாமளா குணசேகரன் பேசுகையில், “இந்த மண்ணின் ஆரோக்கியம் பெண்களின் கைகளில் உள்ளது. ஆண்களை விடவும் பெண்கள் உணர்வு ரீதியானவர்கள், ஆகையால் பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும். ஏனென்றால் பெண்கள் பொருளாதாரத்தை கடந்து உணர்வு பூர்வமாக இதில் ஈடுபடுவார்கள். அதன் பின்பு இயற்கை விவசாயம் என்பது ஆன்மீக விவசாயம் என்ற அளவில் மாறிவிடும்.

ஜீவாமிர்தம் போன்ற இயற்கை இடுபொருட்களால் 60-அடி ஆழத்தில் இருக்கும் மண் புழு கூட உயிர்த்தெழுந்து மேல் வரும் என்ற கூற்று தான் என்னை இயற்கை விவசாயம் நோக்கி ஈர்த்தது. பல பயிர் பல அடுக்கு விவசாய முறையை பின்பற்றுகிறேன். இதனால் மண்ணின் வளம் கூடுகிறது, விளைபொருட்களும் சத்தானதாக கிடைக்கிறது. மேலும் மதிப்பு கூட்டுதல் மற்றும் நேரடி சந்தைப்படுத்துதல் மூலம் பொருளாதார ரீதியாக வெற்றியை அடைய முடிந்தது. 

நீங்கள் உங்கள் வீட்டு மாடியில் இருந்து கூட இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு சுயதொழில் துவங்க முடியும். தொழிலில் வெற்றி தோல்வி குறித்து சிந்திக்க வேண்டாம், எந்த பொருள் தயாரித்தாலும் உங்கள் குழந்தைக்கு தயாரிப்பது போன்று தயாரியுங்கள் என்று சத்குரு கூறி இருந்தார். இதை பின்பற்றினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நான் அதை பின்பற்றுகிறேன்” எனக் கூறினார். 

தொடர்ந்து, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மைக்ரோகிரீன்ஸ் மூலம் வருவாய் ஈட்டும் சாமுண்டீஸ்வரி, இயற்கை ஐஸ்கிரீம் தயாரிப்பில் சிறந்து விளங்கும் லதா, ஆரோக்கியமான வாழ்வியல் குறித்து டாக்டர் ரம்யா ஞானசம்பந்தம் ஆகியோர் உரையாற்றினர். தொழில்முனைவோருக்குத் தேவையான அரசின் நிதி, கடன் வசதிகள் மற்றும் சலுகைகள் குறித்து பெரியகுளம் தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாடு மையத்தின் வசந்தன் செல்வம் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினார்.