ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம் - ஆதியோகி வளாகத்தில் நடந்தது

isha news

ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம் - ஆதியோகி வளாகத்தில் நடந்தது

கோவை, 

ஈஷா அவுட்ரீச் இயக்கம் மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து நடத்திய கிராமப்புற மற்றும் மலைவாழ் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம், ஈஷா ஆதியோகி வளாகத்தில் 12.07.2026 நடைபெற்றது. இம்முகாமில் ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அவர்களுக்கு கங்கா மருத்துவமனையின் சார்பில் நவீன கருவிகள் மூலமாக மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முகாம் குறித்து கங்கா மருத்துவமனையின் மார்பகப் புற்றுநோய் அறுவைச்சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் மருத்துவர் ராஜா சண்முக கிருஷ்ணன் கூறிதாவது, “கங்கா மருத்துவமனை சார்பில் 2020-ஆம் ஆண்டு முதல் ப்ராஜக்ட் சக்தி திட்டத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் மேற்கொண்டு வருகிறோம். இந்த முகாம் எங்களது 150-ஆவது முகாம். இதுவரை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு  இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். அதில் புற்றுநோய் கண்டறியப்பட்ட 81 மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்துள்ளோம். 

அந்த வகையில் அதிகளவிலான சேவைப்பணிகளை மேற்கொண்டு வரும் ஈஷா அறக்கட்டளையுடன்  இணைந்து எங்களின் 150-ஆவது முகாமை ஆதியோகி வளாகத்தில் ஏற்பாடு செய்தோம். இங்கு அனைத்து பரிசோதனைகளும் முழுவதும் இலவசமாக மேற்கொள்ளப்படடன. இத்துடன், பெண்களுக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கியுள்ளோம்” என்றார்.

ஈஷா அவுட்ரீட் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ம.சந்திரகாசா கூறியதாவது, “மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்வதில் கங்கா மருத்துவமனை மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. அவர்கள் இதுவரை நடத்தியுள்ள இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்களில், ஈஷா அவுட்ரீச் இயக்கம் 18 முகாம்களில் இணைந்து பணியாற்றி உள்ளது. இந்த 18 முகாம்களில் 873 பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 7 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து, பூரண குணமடையும் வரை தங்கள் பங்களிப்பை கங்கா மருத்துவமனை அளித்துள்ளது. 

பழங்குடியினப் பெண்கள் பெரும்பாலும் இதுபோன்ற மருத்துவப் பரிசோதனை முகாம்களுக்கு செல்ல மாட்டார்கள். இதுதொடர்பாக, நாம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு அவர்கள் முகாம்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர். பழங்குடியினப் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து கங்கா மருத்துவமனை 150-ஆவது மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுடன் இணைந்து செயல்படுவதில் பெருமைப்படுகிறோம்” என்றார்.