சித்திரை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு எப்படி ?

tamil new year

சித்திரை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு எப்படி ?

தமிழ்நாடு மற்றும் உலகில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தமிழர்களால் சித்திரை மாதம் முதல் தமிழ் புத்தாண்டு நாளாக கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழ் நாட்டில் உள்ள திக, திமுக உள்ளிட்ட சில கட்சிகள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டு நாள் என்று ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் தை முதல் நாளைத்தான் கொண்டாட வேண்டும் கூறி வருகின்றனர். ஆனால் பெரும்பான்மை தமிழர்கள், சித்திரை மாதம் முதல் நாளில்தான் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   

இந்த நிலையில் பிரம்மரிஷியாரின் முகநூலில் உள்ள சில கருத்தை இங்கே வெளியிடுகிறோம் : 

இந்துக்களின் பெரும் வானியல் அறிவு ஒரு உண்மையினை சொன்னது, அது கோள்களின் சஞ்சாரம். ஒரு மனிதனின் 60ம் வயதை கொண்டாட சொன்னமதம் இந்துமதம், காரணம் அந்த 60ம் வயதில் அவன் பிறக்கும் போது என கிரகநிலை இருந்ததோ அந்த நிலைக்கு சரியாக மறுபடி கோள்கள் ஜாதக ரீதியாக மறுபடி அமைந்திருக்கும்.

அதாவது கோள்கள் ஒருமுறை சேர்ந்த காட்சியினை மறுபடி காட்ட 60 வருடம் ஆகின்றது, 60 வருடத்திற்க்கொரு முறை கோள்கள் ஒரே அமைப்பில் வரும் என்பதுதான் இந்த ஆச்சரியமான கணிப்பு. இந்துக்களின் தமிழ் புத்தாண்டும் இந்த புள்ளியில்தான் தொடங்குகின்றது. 

ஆம், பூமி சூரியனை ஒரு வருடத்தில் சுற்றி பழைய இடத்துக்கு வந்துவிடுகின்றது, ஆனால் மற்ற கோள்கள் அப்படி அல்ல‌. செவ்வாய் சூரியனை சுற்ற 3 வருடமும் வியாழன் சூரியனை சுற்ற 12 வருடமும், சனி சூரியனை சுற்ற 30 வருடமும் எடுப்பதை அது அறிந்தது. ஆம், இன்றைய விஞ்ஞானம் இப்பொழுது உறுதிபடுத்தியதை அன்றே சொன்னமதம் இந்துமதம். அம்மதம் மிக சரியாக 60 வருடங்களுக்கு ஒருமுறை கோள்கள் அவை தொடங்கிய இடத்தில் சரியாக அமர்கின்றன என்பதை உணர்ந்தது.

அதாவது சுற்றிகொண்டே இருக்கும் கிரகங்கள் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை சரியான கோணத்துக்கு வருகின்றன, அதன் பின் அவை மாறிவிடுகின்றன‌. 60 வருடத்தில் அந்த கோணம் மறுபடி அமைகின்றது. இதனால் பூமி சூரியனை சுற்ற ஒரு வருடம் என்பதை தாண்டி, அது மற்ற கோள்களுடன் சரியாக பொருந்திய இடம் வர 60 ஆண்டுகள் ஆகும் என்பதை உணர்ந்து அதை குறிக்க 60 வருடத்தை சொன்னது. இந்த 60 வருடங்களுக்கான பெயரை ஒரு கதை மூலம் சொன்னது. 

பகுத்தறிவு கும்பல் அந்த கதையினை பிடித்து கொண்டுதான் நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த குழந்தைகளா 60 வருடங்கள் என ஆபாசம் ஆபாசம் என ஊளையிட்டு திரிகின்றன‌. அவைகளின் பகுத்தறிவு அவ்வளவுதான், அவைகளின் 4.5 அறிவுக்கு பெயர் பகுத்தறிவு என அவைகளே நினைத்து ஊளையிடுகின்றன‌. உண்மையில் அந்த 60 குழந்தைகள் அது நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த குழந்தைகள் என்பதில் பெரும் வானியல் தத்துவமே அடங்கி இருக்கின்றது. ஆம் நாரதர் என்றால் ஓடி கொண்டே இருப்பவர், ஓரிடத்தில் நில்லாதவர் என பொருள். ஆம் கிரகங்களும் நாட்களும் கோள்களும் ஓடி கொண்டே இருப்பவை. விஷ்ணு என்றால் பிரபஞ்சம், இந்த மாபெரும் பிரபஞ்சம் அவர் வடிவே.

இந்த பூமி 60 வருட சுழற்சியில் எங்கெல்லாம் நிற்குமோ எந்த புள்ளிக்கெல்லாம் செல்லுமோ அதை குறிக்கத்தான் 60 பெயரை இட்டார்கள். நாரதரின் குழந்தைகள் அவை என்றால் ஓடி கொண்டே இருக்கும் நாட்களும் பூமியும் இந்த இடத்தில் இருக்கின்றன எனும் மைல் கல் போன்ற அடையாளங்கள் அன்றி வேறல்ல‌.

புரிவதற்கு மிக சிரமமான இந்த வானியல் தத்துவத்தை அவை ஒரு பக்தி கதையினை சொல்லி புரிய வைத்தன‌. இன்னும் ஆழமாக சொல்ல வேண்டுமானால் உங்களுக்கு வானியல் இயற்பியல் அறிவு இருந்தால் சொல்லலாம். ஆம், வானம் என்பது வெற்றிடம் அல்ல, அங்கு கருந்துளை முதல் விலக்கு விசை பிரபஞ்ச ஈர்ப்பி விசை உள்ளிட்ட ஏக சங்கதிகள் உண்டு. கண்ணுக்கு தெரியாத போர்வையில் சுற்றிவரும் கோலி குண்டு போல் பூமி சுற்றி வருகின்றது, அப்பொழுது அது தொடர்ந்து இயங்க ஒரு சக்தி அவசியம். இந்த 60 இடங்களிலும் வெவ்வேறு சக்திகள் அதற்கு துணைபுரிகின்றன, இவை எல்லாம் ஒருவகை சக்திகள். 

பிரபவ முதல் அட்சய என்பது வரை கண்ணுக்கு தெரியாத சக்தியின் ஊடாக பூமி செல்லும் காலங்கள், அப்படி 60 இடங்கள் உண்டு. இதனை இன்று விஞ்ஞானம் அறியும் முதல்படியில் கூட இல்லை, அவர்கள் கருந்துளை , கருஞ்சக்தி என இப்பொழுதுதான் வாசல் அருகே சென்றிருக்கின்றார்கள். பிரிதொரு நாளில் பூமியின் இயக்கம் பிரபஞ்சத்தில் எப்படி நடக்கின்றது எனும் முடிவுகள் வரும்பொழுது , அன்றே இந்துக்கள் சொன்ன 60 வருட சுழற்சியும் அதற்கு காரணமான 60 இடங்களின் விஞ்ஞான வடிவமும் அப்பொழுது வெளிவரும். 

ஆம், இந்துமதம் எனும் அந்த மகா பிரபஞ்ச கடல் எல்லாவற்றிலும் கடைபுள்ளிவரை அன்றே உணர்ந்து அன்றே மானிடருக்கு புரியும் வண்ணம் சொல்லி வைத்திருந்தது. தைமாதமே தமிழ் புத்தாண்டு, அது ஆரிய வருகைக்கு பின் இப்படி திரிந்துவிட்டது என சொல்லும் கோஷ்டிகள் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தோன்றின, அதற்கு முன் இப்படிபட்ட வாதமே இல்லை.

உலகம் முழுக்க புத்தாண்டு என்பது இந்த வசந்த காலத்தில்தான் கொண்டாடபட்டது, ஐரோப்பாவில் கூட ஏப்ரலில்தான் புத்தாண்டு இருந்தது, பின் கிறிஸ்தவ போப் காலத்தில் ஜனவரிக்கு மாற்றிவிட்டு ஏப்ரல் 1ல் புத்தாண்டு கொண்டாடுபவர்கள் முட்டாள்கள் என அவர்களாக சொல்லி கொண்டார்கள். தமிழ் புத்தாண்டு எக்காலமும் சித்திரை மாதமே, அதுவே இந்துக்கள் இங்கு கொண்டாடும் புத்தாண்டும் ஆயிற்று, இப்பொழுதும் அது தமிழ் இந்துக்களின் புத்தாண்டே, ஆம் இந்து தமிழர்களே அதை கொண்டாடுகின்றார்கள். 

தைமாதம் தமிழ் புத்தாண்டு என்று பண்டைய இலக்கியத்தில் குறிப்பில்லை அப்படியே பொங்கல் விழா உழவனின் விழா என்றெல்லாம் வரலாறும் இல்லை ஆவணமுமில்லை. பாரத கண்டத்தின் தென்பகுதி கலாச்சார படி சித்திரை 1ம் தேதியே புத்தாண்டாயிற்று, இது தமிழருக்கு மட்டும் அல்ல, தெலுங்கு மலையாளம் ஏன் சிங்களவருக்கு கூட அதுதான் புத்தாண்டு.

தமிழனை பிராமணன் குழப்பினான் என்றால் சிங்களவனை குழப்பியது யார்?

இந்து தமிழர் வானவியலை கசடற கற்றிருந்தனர், இந்துக்களான தமிழர் வானியல் அறிவுபடி கடவுள் முதல் கன்றுகுட்டி வரை ஜாதகம் உண்டு, பூமிக்கும் அது உண்டு. அதன் படி முதல் ராசியான‌ மேஷ ராசியில் சூரியன் நுழையும் நாள் புத்தாண்டு என அறிவிக்கபட்டது, மேஷ ராசியில் அதாவது முதல் ராசியில் சூரியன் நுழையும் பொழுது பூமி 7ம் இடத்தில் இருக்கும்.

துலா ராசியின் நட்சத்திரம் சித்திரை அடுத்து சூரியன் ரிஷப ராசிக்கு வரும் பொழுது பூமி விசாக நட்சத்திரத்தை கொண்ட ராசி மண்டல்த்தில் இருக்கும். ஆம் இந்துக்களின் மாதமெல்லாம் பவுர்ணமி அன்று என்ன நட்சத்திரம் வருமோ அதை குறித்தே அமைந்திருக்கும். சித்திரா பவுர்ணமி முதல் பங்குனி உத்திரம் வரை கொண்டாடபட்டு , தமிழ் மாதங்களின் பெயர் நட்சத்திர அடிப்படையில் அமைந்திருப்பது அப்படியே.

இப்படித்தான் 12 ராசிக்கும் 12 மாதங்களென சொல்லி 12 பவுர்ணமிக்கும் 12 நட்சத்திரங்களை கொடுத்து வைத்திருந்தது இந்துமதம். முதல் ராசி மேஷம் என யார் சொன்னார்கள்? ஆதாரம் உண்டா என்றால் உண்டு, சொன்னது அகத்திய மாமுனி. அவர்தான் தன் பன்னிராயிரம் நூலில் பங்குனி கடைமாதம் சித்திரை முதல்மாதம் என அன்றே எழுதி வைத்தார். 

சங்க இலக்கியங்களின் பதினென்மேல்கணக்கு நூல்களின் பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநெல்வாடையின் வரிகள் (160–161) இப்படி சொல்கின்றன‌. 

"திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக 
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து.."

அதாவது திண்ணிய நிலையினையும் கொம்பினையுடைய மேட ராசியினை முதலாக கொண்டு ஏனை இராசிகளிற் சென்று திரியும் சூரியன் என பொருள்.

ஆம் , மேஷ ராசி முதலாவதாக கொண்டுதான் இங்கு ஆண்டு கணக்கு அன்றே தொடங்கபட்டது, இந்து இந்துக்களின் வழக்கமாக இருந்தது. இந்துக்களின் ஒரு பிரிவான தமிழருக்கும் அது புத்தாண்டாயிற்று. புறநாநூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ் இலக்கிய நூல்களிலும் இதை உறுதி செய்யும் வரிகள் உண்டு. திருவாரூர் இந்து ஞானி கமலபிரகாசர் சித்திரையே வருட தொடக்கம் என பலநூறு ஆண்டுக்கு முன்பே எழுதி வைத்தார். 

பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும் இதை சங்க இலக்கியமான மலைபடுகடாம் தெளிவாக சொல்கின்றது. 

"தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை" என்கின்றது
பழமொழி நானூறு "கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்" என்றும் பாடுவதால் இளவேனில் தொடக்கமான சித்திரையினை தெளிவாக சொல்கின்றது. 

பொழுதுகள்தான் தமிழ் வருடத்தை நிர்ணயிக்கும் என ஒரு வாதத்துக்கு சொன்னாலும் சீவக சிந்தாமணி கோடை கால தொடக்கமே முதல் பருவம் என தெளிவாய் சொல்கின்றது. சிலப்பதிகாரத்தில் "ஏர்மங்கலம்" என ஒரு பாடலே உண்டு, அதில் "சித்திர மேழி வைபவம்" என ஒரு விழா நடப்பதே தமிழரின் பருவகால தொடக்கம் அது என சொல்கின்றது.

அதாவது சித்திரை மாதத்தில் அரசன் ஏர் ஓட்டி வருடத்தை தொடங்கி வைப்பான் என்கின்றது அந்த வரி இந்த நிகழ்வு அன்று பாரத கண்டம் முழுக்க இந்து விழாவாக‌ இருந்தது, ஆம் அப்படி ஒருநாள் ஜனகன் மன்னனாக இருந்து பொன் ஏரால் உழும் பொழுதுதான் சீதை கிடைத்தாளாம்.

பாரதம் முழுக்க அரசர்கள் அப்படி சித்திரை 1ம் தேதி உழுது புத்தாண்டை தொடங்குவார்கள், இன்று கம்போடியாவில் மட்டும் அரசன் சித்திரை 1ம் நாள் உழும் வைபவம் நடக்கின்றது. இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 – 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன.

இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் – முதுவே னில், கார் – கூதிர், முன்பனி – பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் – ஜோதிட அடிப்படையி லும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்க மாகும்.

சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 – 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது.

நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “”தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்” என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இப்படி ஏகபட்ட சான்றுகள் உள்ளன‌.

சங்க இலக்கியம், அரச வரலாறு, வானியல், தொன்று தொட்டு வரும் சம்பிரதாயம், தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்து இன்று மலையாளம் என்றாலும் கனி காணும் சித்திரை விஷூ தரிசனம் செய்யும் சகோதர இனம் என ஏக சான்றுகள் உண்டு.

முன்பு இந்துவாக இருந்து பின் பவுத்தமதம் தழுவினாலும் இந்துக்களின் புத்தாண்டான தமிழ் புத்தாண்டிலே சிங்கள புத்தாண்டு வருவது இன்னொரு பெரும் சான்று, காலம் கடந்து நிற்கும் சான்று. இவ்விடத்தில் இந்த பகுத்தறிவு கோஷ்டி ஒரு கேள்வியினை எழுப்பும், அது தமிழ் ஆண்டுகள் 60க்கும் தமிழ் பெயர் இல்லையே ஏன் என்பது?.

தமிழரில் இளவேனில் முதல் பின்பனிக்காலம் வரை பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தது, ஒரு பொழுதுக்கு இரு மாதம் என 6 பொழுதுக்கும் 12 மாத கணக்கினை அது சொன்னது. ஆண்டு என்பது ஒரு சுழற்சி எனும் அடிப்படையில் அதற்கென பெயர் வைக்கும் அவசியம் இல்லை.

மாயன் காலண்டரில் ஆண்டுக்கு பெயர் உண்டா? இல்லை இந்த ரோமன் நாள்காட்டியில்தான் ஆண்டுக்கு பெயர் உண்டா?. எந்த இனத்திலும் அன்று அப்படி இல்லை. அறுவடை முடிந்து மாசி மாதம் ஓய்வு கொண்டாட்டம் என முடித்து சித்திரையில் மறுபடி ஆண்டு கணக்கை தொடங்குவார்கள்.

இதனால் சித்திரா பவுர்ணமி அவர்களின் தொடக்க பவுர்ணமி ஆயிற்று. இங்கு ஒரு குழப்பமும் இன்றித்தான் ஆண்டாண்டு காலம் தமிழ் புத்தாண்டு கொண்டாடபட்டது , சுல்தானிய ஆட்சியில் குழப்பம் வந்தாலும் நாயக்கர் ஆட்சியில் அது சரியாயிற்று. 

சிக்கல் வெள்ளையன் ஆள தொடங்கிய‌ 18ம் நூற்றாண்டில் வந்தது, செல்லும் இடமெல்லாம் அந்த இனத்தின் கலாச்சாரத்தை மதத்தை அடையாளத்தை தன் கைகூலிகள் மூலம் அழித்து தன் மேலாண்மையினை ஏற்க செய்த வெள்ளையன் இங்கு குழப்பத்தை தொடங்கினான்.

இந்த குழப்பம் 16ம் நூற்றாண்டி தொடங்கிற்று, 17ம் நூற்றாண்டில் தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்பம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அப்பியை (ஐப்பசி) மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமி ழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அப்பியை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது. இதை இன்னும் அழுத்தியவன் தமிழகத்துக்கு கிறிஸ்தவம் பரப்ப வந்து தமிழ் படித்த வீரமாமுனி எனும் இத்தாலியனான பெஸ்கி, தேம்பவானி என கிறிஸ்த நூலை தமிழில் எழுதியது அவனே.

அவன் தன் தேம்பாவணியில் (மக வருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகின்றான், அதாவது ஐரோப்பிய மாதமும் தமிழ் மாதத்தையும் ஒரே மாத கணக்கில் கொண்டு வருகின்றான்.

இதுதான் இன்றும் ஈழதமிழர் ஜனவரி 1ம் தேதியினை தை 1 என குறிக்க அடிகோலிற்று, இன்றும் ஈழதமிழரிடையே இந்த குழப்பம் உண்டு. நவம்பர் 26ம் தேதியினை கார்த்திகை 26 என தமிழின உணர்வாளர்கள் முழங்குவது இப்படித்தான். ஐரோப்பாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் ஏயர் எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர்.

கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங் குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்பு கள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். இது அப்படியே இந்துக்களின் கொண்டாட்ட சாயலை சொல்வதை அறியலாம், பூம்புகாரின் இந்திரவிழாவின் பொழுது கிரேக்க கப்பல்கள் அங்கு இருந்ததும் குறிப்பிடதக்கது.

கிரேக்கர்கள் இந்திய இந்துக்களிடம் இருந்தே பலவற்றை கற்று ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றனர் என்பது எல்லோரும் ஒப்புகொண்ட வரலாறு. கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ் வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட “ஏரீஸ்’ வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும்.

முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப் ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும். இந்திய ஜோதிட அறிவியலில் பூர் ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பார சீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாத மாகும். இவ்வாறு பங்குனி – சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறு பாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாத மாகக் கருதப்பட்டுள்ளது.

காலக்கணக்கீட் டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது “”மீன மேஷம் பார்த்தல்” என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும். இப்படியெல்லாம் இருந்த உலக வழமை கிறிஸ்தவ காலங்களில் மாறிற்று, இன்னும் ஈழ கைகூலிகள் சில தமிழ் புத்தாண்டை தைமாதம் எனவும் அதுவும் தை மாதம் 1 தேதி ஜனவரி 1ம் தேதியே பிறப்பதாக மாற்றி வைத்து அவனை மகிழ்ச்சி படுத்தின‌.

ஆனால் தமிழகத்தில் இந்துக்கள் வலுவாய் இருந்ததால் மாற்ற முடியவில்லை, விளைவு தந்திரமான காரியம் மூலம் இந்துக்களை குழப்பினர் பிரிட்டிஷார். அதுவரை வடமொழியும் தமிழ்மொழியும் இரு கண்களாக இருந்த தமிழகத்தில் இரு மொழியும் செழித்த தமிழகத்தில் குபீர் தமிழுணர்வு பொத்து கொண்டு வந்தது. அகத்தியன் முதல் கம்பன் வரை எவ்வளவோ தமிழ்காத்த புலவர்கள் இருந்த மண்ணில் தனிதமிழ் இயக்கம் எனும் இம்சை வெள்ளையன் காலத்தில்தான் வந்தது. 

இதில் வேதாசலம் எனும் பெயரை மறைமலை அடிகள் என மாற்றி இம்சை செய்தவர் முக்கியமானவர். இக்கோஷ்டித்தான் பிரிட்டிஷாரின் தூண்டுதல் பேரில் தமிழர் இந்தியர் அல்ல, தமிழர் வேறு அவர்கள் கலாச்சாரம் வேறு என கொடிபிடித்தது. இவர்கள்தான் 1920 வாக்கில் தமிழனுக்கு தைமாதமே புத்தாண்டு என ஓலமிட்டனர்., ஆனால் அதை கண்டு கொள்வார் யாருமில்லை. இதையே ராம்சாமி, அண்ணா கோஷ்டியும் சொன்னது.

1972ல் கருணாநிதி இதைத்தான் பிடித்து தொங்கி தமிழ்புத்தாண்டு தைமாதம் என அழிச்சாட்டியத்தை ஆரம்பித்தார். அவர் பிறவி அரசியல்வாதி, இப்படி ஒரு பிரச்சினையினை கிளப்பினால்தான் அரசின் ஊழல் முதல் குடும்ப அரசியல் பிரச்சினை வரை மக்கள் பார்வையில் இருந்து மறையும் என்பது அவர் கணக்கு. இதனால் தன்னை காக்க இப்படி புது புது பிரச்சினைகளை கிளறிவிட்டு அரசியல் செய்து கொண்டிருந்தார், அவருக்கு தெரிந்தது அதுதான். 

மற்றபடி இங்கு தமிழ் மொழி குடும்பத்துக்கு தென்னக இந்துக்களுக்கு சித்திரை 1ம் தேதியே புத்தாண்டு. இதனால்தான் திராவிட விஷம் படியாத கேரளமும் தெலுங்கும் கன்னடமும் தங்கள் புத்தாண்டினை சித்திரை தொடக்கத்தில் உற்சாகமாக கொண்டாடுகின்றன‌. இங்குமட்டும் குழப்பம் எனில் திராவிட இம்சைகள் செய்த கெடுதல் எவ்வளவு என்பது புரிய சிரமமானது அல்ல‌. 

கேரளத்தின் விஷூ தரிசனம் முதல் யுகாதியில் வைக்கும் வேப்பம் பூ பச்சடி வரை தமிழ் இந்துக்களின் பண்பாடே. காணுதல் என பொருள்படும் விஷூ எனும் அந்த சமஸ்கிருத‌ வார்த்தையே ஆங்கிலத்தில் Visual வரும் வார்த்தைக்கு முன்னோடி ஆயிற்று. 

ஆம் அன்று சித்திரை 1ல் காலையில் எழுந்து கனி தரிசித்து, பெரியோரிடம் ஆசி வாங்கி, குலதெய்வம் கோவிலில் வழிபட்டு , புத்தாடை அணிந்து கடவுளை தொழுது,ஏரோட்டி வேலை தொடங்கி என பெரும் சம்பிரதயங்கள் இருந்தன‌. வேப்பம்பூ துவையலும் சர்க்கரை பொங்கலும் சமைக்கபடும் பதார்த்தமாயிருந்தன, இனிப்பும் கசப்பும் கலந்துதான் எல்லா வருடமும் வரும் என்பதை அவை சொல்லாமல் சொல்லிற்று. 

இது போக மருந்துநீர் என ஒரு மூலிகை நீர் இளையோருக்கு மூத்தோரால் கொடுக்கபட்டு ஆசீர்வதிக்கபடும், எல்லா சிக்கலுக்கும் பெரியோர் வழியில் தீர்வு உண்டு என்ற தத்துவம் அது. விஷூ நீர் என அதற்கு பெயர்.

அதன் பின் இளையோருக்கு பெரியோர்களால் அன்பளிப்புகள் வழங்கபடும் அது "கைவிசேஷம்" என்றானது. இவ்வழக்கம் தமிழகத்தில் விடைபெற்றாலும் ஆச்சரியமாக சிங்களவர்களிடம் இன்றும் உண்டு. இன்று தமிழ்நாட்டில் அந்த அழகான‌ கலாச்சாரமில்லை, பெரும் காரணம் பிரிட்டிசாருக்கு அடிமையான சில தமிழக இயக்கங்கள் அன்றி வேறல்ல‌. மலையாளிக்கும் தெலுங்கனுக்கும் அப்படி இயக்க்கம் இல்லை என்பதால் அவன் இந்துவாக பாரம்பரியபடி புத்தாண்டை கொண்டாடுகின்றான். 

தமிழனை அந்த அரையறிவு இயக்கங்கள் பகுத்தறிவு பேசி குழப்பி வைத்துவிட்டன‌. முன்பு சேரநாட்டு பகுதியாய் இருந்த கன்னியாகுமரி பக்கம், பாபநாசம் பக்கம் தவிர தமிழகத்தில் புத்தாண்டு கொண்ட்டாட்டம் பெரிதாக இல்லா அளவு இங்கு மடைமாற்றபட்டது. 

சித்திரை புத்தாண்டு மிக விமரிசையாக கொண்டாடபட வேண்டும், எல்லா மரபுகளையும் சம்பிரதாங்களையும் மீட்டெடுத்து தமிழகம் அதை உற்சாகமாக கொண்டாடட்டும். தமிழ் தமிழர் என சொல்லி சொல்லி இங்கு தமிழரின் மரபும் பண்பாடும் ஒழிக்கபட்டதன்றி வேறு எதுவும் நடக்கவில்லை, காரணம் தமிழும் தமிழனும் இந்துமதமும் பிரிக்கமுடியாதவை.

இதில் ஒன்றை பிரித்தாலும் இன்னொன்று நிலைக்க முடியாது, அப்படித்தான் இந்து எனும் பெரும் கடலே பிரிக்க முயற்சிக்கபட்டு தமிழன் எதையெல்லாமோ தொலைத்துவிட்டு நிற்கின்றான். இந்துக்களின் தமிழ்புத்தாண்டில் அவனின் மரபுகள் ஒவ்வொன்றாக மீட்கபட்டு முறையாக அது கொண்டாடபட வேண்டும் அதற்கு கனி தரிசனம் முதல் ஆலய வழிபாடு என தொடங்கி ஒவ்வொன்றாய் மீட்டெடுக்கலாம்.

பிறக்கும் இந்து தமிழ் வருடமான க்ரோதி ஆண்டு வீட்டுக்கும் நாட்டுக்கும் உலகுக்கும் நன்மை தரும் ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். இந்த இந்து தமிழ் புத்தாண்டை இந்து சம்பிரதாயக்களுடன் கொண்டாடுவது ஒவ்வொரு இந்துவின் கடமையாகின்றது, கனி காணுதல் எனும் அந்த நிகழ்வு மலையாளிகளுக்கு மட்டுமானது அல்ல அது தமிழக இந்துக்களின் வழமை.

தமிழகத்தில் ஏற்பட்ட ஆப்கானிய தாக்கம், நாயக்க அரசு மற்றும் மராட்டியரின் தாக்கம் கேரளத்தில் இல்லை என்பதால் அந்த சம்பிரதாயம் அங்கு மட்டும் நீடித்து முன்னாள் கேரளமான நாகர்கோவில், கோவை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்கின்றது. அந்நாளை எல்லா இந்துக்களும் கனி தரிசனத்தோடு கொண்டாடலாம், க்ரோதி வருடம் நாட்டுக்கும் எல்லா மக்களுக்கும் நன்மையும் வளமையும் கொண்டுவர வாழ்த்துக்கள்.