அரசு வேலைக்காக பதவியை ராஜினமா செய்த ஒன்றிய தி.மு.க கவுன்சிலர் நர்மதா.!

Thoothukudi union news

அரசு வேலைக்காக பதவியை ராஜினமா செய்த ஒன்றிய தி.மு.க கவுன்சிலர் நர்மதா.!

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, ஹெலன் பொன்மணி, ஒன்றிய குழு துணை தலைவர் ஆஸ்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஸ்பாலன், முத்துக்குமார், சில கோரிக்கைகளை சுட்டிக்காட்டி பேசினார்கள். 

ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் பேசுகையில், அனைத்து பணிகளும் எல்லா பகுதிக்கும் முறைப்படுத்தி, முறையாக நடைபெறும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பூபாண்டியாபுரம், சமீர்வியாஸ்நகர் பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் அமைத்தல், கீழ்க்கூட்டுடன்காடு கிராமத்தில் தார்சாலை அமைத்தல், மேலக்கூட்டுடன்காடு தெற்கு தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், தளவாய்புரம் ஊராட்சியில் பயணிகள் நிழற்கூடம் அமைத்தல், ஆரோக்கியபுரத்தில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், அல்லிகுளம் ஊராட்சியில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் அமைத்தல், பெரியநாயகி புரம் மெயின்ரோட்டில் தார் சாலை அமைத்தல், கோ.சுப்பிரமணியபுரம் காமராஜ் நகரில் தார்சாலை அமைத்தல், குலையன்கரிசல் ஊராட்சி பத்திரகாளியம்மன் கோவில் முன்பு இருந்து திரு பழைய காசி அவர்கள் வீடு வரை பேவர் பிளாக் சாலை அமைத்தல், சோரீஸ்புரம் தெற்கு தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், சேர்வைக்காரன் மடம் ஊராட்சி சக்கம்மாள்புரம் கிராமத்தில் மருதாணிகுட்டம் சட்டர் புதியதாக அமைத்தல், கூட்டுடன்காடு ஊராட்சி மேற்பகுதி தெருக்களில் சிமெண்ட் தளம் அமைத்தல், குமாரகிரி ஊராட்சி மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் 1 லட்சம் லிட்டர் சம்ப் அருகில் போர்வெல் அமைத்தல், திம்மராஜபுரம் ஊராட்சி திம்மராஜபுரம் வேப்பங்குளத்தில் போர்வெல் அமைத்தல், முடிவைத்தானேந்தல் ஊராட்சி வாகைகுளம் முதல் சாயர்புரம் செல்லும் ரோட்டில் கீழ்பகுதி இந்திராநகர் 1வது தெரு மரக்கடை எதிரில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட ஒரு தீர்மானத்தில் 66 பணிகள் மேற்கொள்ளுதல் என மொத்தம் 46 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ் பாலன், சுதர்சன், தொம்மைசேவியர், ஆனந்தி, ஜெயகணபதி, மரிய செல்வி, முத்துக்குமார், முத்துலட்சுமி, செல்வபார்வதி, நர்மதா, உதவி பொறியாளர் ரவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலெட்சுமி, பணி மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், மேற்பார்வையாளர் நிலை-1 செல்வி, ஊரக நல அலுவலர் சண்முகசுந்தரி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

12வது வார்டு ஒன்றிய தி.மு.க கவுன்சிலர் நர்மதா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதை ஒன்றிய குழு கூட்டத்தில் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுகுறித்து நர்மதா, எனக்கு அரசு பணி கிடைக்க இருப்பதால் தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்தார்.