தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி - தனியார் ஆலையை எதிர்த்து குலையன்கரிசலில் உண்ணாவிரதம்
Thamiraparani

தூத்துக்குடி - திருச்செந்தூர் வழித்தடத்தில் ஆத்தூர் மற்றும் முக்காணி இடையே தாமிரபரணி ஆறு செல்கிறது. இது கிட்டத்தட்ட தாமிரபரணி ஆற்றின் கடைசி எல்கையாகும். அதாவது தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் சற்று தூரத்தில் கடலில் கலக்கும் பகுதியாகும். தமிழ்நாட்டிலேயே தோன்றி தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணி ஆறு. இந்த ஆறு, குறிப்பிட்ட இந்த பகுதியில் வற்றாத ஜீவநதியாக விளங்கி வருகிறது.
உள்ளூர் நபர்கள், வழிப்போக்கர்கள் தவிர, திருச்செந்தூர் முருகன், குலசை முத்தாரம்மன் கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் இந்த ஆற்றில் குளித்துவிட்டு செல்வது வழக்கம். அதுபோல் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும்போது இந்த ஆற்று நீரையும் புனித நீராக எடுத்து வழிபடுவது வழக்கம்.
அப்படி வழிபடுவதற்கு குலையன்கரிசல் ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் திருவிழாவிற்காக புனித நீர் எடுக்கும்போது குலையன்கரிசல் ஊரை சேர்ந்த கோகுல்(17)என்கிற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியாகி உள்ளார். ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள பம்பிங் ரூம்புதான் அதற்கு காரணம் என்றும், அந்த பம்ப் ரூம் தாரங்கதாரா கெமிக்கல் என்கிற தனியார் ஆலைக்கு சொந்தமானது என்றும் சொல்கிறார்கள். அதாவது புனித நீர் எடுக்க செல்லும்போது பம்பு ரூமிலிருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டிருந்ததாகவும், அதன் அருகே சென்ற வாலிபரை அதனுள் இழுத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த பகுதியில் குளிப்போர் திடீரென தண்ணீரில் மூழ்கி இறந்து போவதற்கும் அதுதான் காரணம் என்று குற்றம் சாட்டும் குலையன்கரிசல் பிரமுகரும், முன்னாள் தூத்துக்குடி யூனியன் சேர்மனுமான வி.பி.ஆர்.சுரேஷ் உள்ளிட்டோர், பலியான வாலிபர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், குறிப்பிட்ட அப்பகுதியில் அறிவிப்பு,அதன் அருகே செல்ல முடியாத வகையில் தடுப்புகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி குலையன்கரிசல் ஊரில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் உண்ணாவிரத போராட்டம் தொடங்க உள்ளது. வாலிபரின் உறவினர்கள் மற்றும் குலையன்கரில் ஊரை சேர்ந்தவர்கள், கோரிக்கை நிறைவேறும் வரை கோகுல் உடலை வாங்க மாட்டோம் என்று கூறிவருகின்றனர்.