தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு - கூட்டாம்புளி உள்பட 3 ஊராட்சி மக்கள் ஆர்ப்பாட்டம்
Thoothukidi collector

தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன் கடந்த 31.12.2024 அன்று, கோயம்புத்தூர்,கடலூர்,திண்டுக்கல்,ஈரோடு,கரூர்,ஓசூர், மதுரை,சேலம்,திருச்சிராப்பள்ளி,திருப்பூர்,ஆவடி,பெருநகர சென்னை மாநாகராட்சி,கும்பகோணம்,தஞ்சாவூர்,தூத்துக்குடி,சிவகாசி ஆகிய 16 மாநகராட்சிகளின் எல்லை விரிவாக்கம் குறித்த அரசாணை அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தநிலையில் மாநகராட்சி எல்லைக்குள் இணைவதற்கு கிராம ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அந்தவகையில் தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மாப்பிள்ளையூரணி,அய்யனடைப்பு,கோரம்பள்ளம்,மறவன்மடம்,சில்லாநத்தம், முள்ளக்காடு மற்றும் குமாரகிரி ஆகிய ஊராட்சிகளில் சில ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிகின்றனர். வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ரத்தாகும், மாநில, மத்திய வீடு கட்டும் திட்டம் ரத்தாகும், வீட்டுவரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரி வகைகள் அதிகமாகும் என அதற்கு காரணம் சொல்கிறார்கள். இதுபோன்ற காரணங்களை கூறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் குமாரகிரி, அய்யனடைப்பு,கோரம்பள்ளம் ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
குமாரகிரி ஊராட்சிக்கு உட்பட்ட கூட்டாம்புளி, திருமலையாபுரம், சிலுவைபுரம், சிறுபாடு மற்றும் சவேரியார்புரம் கிராமங்களின் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்கள் ரமேஷ்பாபுஜி, பட்டுமுருகேசன், தங்கத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் விபிஆர்.சுரேஷ், ராமச்சந்திரன், டெல்லிமணி,பால்ராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் மாவட்ட கலெக்டர் இளம்பகவத்திடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், குமாரகிரி ஊராட்சியில் உள்ள கூட்டாம்புளி, திருமலையாபுரம், சிலுவைபுரம், சிறுபாடு மற்றும் சவேரியார்புரம் கிராமங்களை தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைக்காமல் தனி ஊராட்சியாக அல்லது குமாரகிரி ஊராட்சியாக தொடர ஆவண செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கூட்டாம்புளியில் இன்று (27.1.2025)அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. முன்னதாக கலெக்டரிடம் மனு கொடுக்க கிளம்பிய பொதுமக்கள் மெயின் ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் அய்யனடைப்பு, கோரம்பள்ளம் ஊராட்சிகளை சேர்ந்த மக்களும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.