கூட்டாம்புளி தொழிலாளி கொலை வழக்கில் தாய்,மகனுக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

Judgement

கூட்டாம்புளி தொழிலாளி கொலை வழக்கில் தாய்,மகனுக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

கூட்டாம்புளி விவசாய தொழிலாளி கொலை வழக்கில் கைது செய்யபட்ட தாய், மகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.  

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கீழத்தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் என்ற சுயம்புலிங்கம் மகன் ஜெயபாலன் என்ற கண்ணன்(45). விவசாய தொழிலாளியான இவரை கடந்த 23.07.2013 அன்று அதே பகுதியை சேர்ந்த சுயம்புலிங்கம், அவரது மனைவி மல்லிகா, மகன் அழகுலிங்கம், 14வயதுடைய அவரது இன்னொரு மகன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து முன் பகை காரணமாக வெட்டி கொலை செய்தனர். இதை தடுத்த கண்ணனின் மனைவி தங்கஜோதிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சுயம்புலிங்கம் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். இதில் 14 வயது சிறுவன் தொடர்பான வழக்கு இளம் சிறார் நீதி குழுமத்தில் நடந்து வருகிறது. 

மற்ற மூவர் மீதான வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை காலத்தில் இரண்டாவது குற்றவாளியான சுயம்புலிங்கம் இறந்துவிட்டார். இந்தநிலையில் கடந்த 8ம் தேதி வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி பிலிப்நிக்கோலஸ், குற்றம்சாட்டப்பட்ட சுயம்புலிங்கம் மனைவி மல்லிகை, மகன் அழகுலிங்கம் ஆகிய இருவரையும் குற்றவாளியாக அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விபரங்களை 12ம் தேதி(இன்று) அறிவிப்பதாக உத்தரவிட்டிருந்தார். 

இந்தநிலையில் இன்று இவ்வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலை மற்றும் கொலை முயற்சி குற்றத்திற்காக முதல் குற்றவாளி அழகுலிங்கம், 3வது குற்றவாளி மல்லிகா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,500 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எஸ்.பி.ஆனந்த்கேப்ரியேல்ராஜ் ஆஜராகி வாதாடினார்.