திருச்செந்தூா் முருகன் கோயிலில் பிப். 14 ல் மாசித் திருவிழா கொடியேற்றம் : நாளை கொடிப்பட்ட வீதி உலா

Thiruchendur Murugan

திருச்செந்தூா் முருகன் கோயிலில் பிப். 14 ல் மாசித் திருவிழா கொடியேற்றம் : நாளை கொடிப்பட்ட வீதி உலா

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புகழ்மிக்க மாசித் திருவிழா நாளை மறுநாள் புதன்கிழமை (பிப். 14) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக நாளை செவ்வாய்கிழமை (பிப். 13) மாலை கொடிப்பட்ட வீதி உலா நடைபெறுகிறது.

இதையொட்டி, கோயிலில் புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். 4.30 மணிக்கு திருக்கோயில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சியாக 5ஆம் திருநாளான பிப். 18ல் மேலக்கோயிலில் (சிவன் கோயில்) இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையும், பிப்.20இல் அதிகாலை 4.30 மணிக்கு அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும் நடைபெறும். தொடா்ந்து 8.45 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டி வோ் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சோ்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு சுவாமி சிவன் அம்சத்தில் தங்க சப்பரத்தின் மீது சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறார்.

பிப்.21இல் காலை சுவாமி பிரம்மா அம்சத்தில் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி திரு வீதி வலம் வந்து மேலக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறும். முற்பகல் 11 மணிக்கு சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சோ்கிறார். பிப்.22இல் சுவாமி தங்க கயிலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருள்கின்றனா். பத்தாம் திருநாளான பிப்.23ல் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. காலை 6.30 மணிக்கு விநாயகா், சுவாமி, அம்பாள் தனித்தனி தோ்களில் ரதவீதியில் வலம் வந்து அருள் பாலிக்கின்றனா். பிப்.24இல் இரவு தெப்பத்திருவிழாவும், மறுநாள் 12ஆம் திருநாளுடன் விழா நிறைவு பெறுகின்றது. 

நடைதிறப்பு நேரம் : 1, 7ஆம் திருநாள்களில், (பிப்.14, 20) திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கும், 2ஆம் திருநாளில் (பிப். 15) அதிகாலை 3 மணிக்கும், மற்ற நாள்களில் வழக்கம் போல 4 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத்தலைவா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் மு.கார்த்திக், அறங்காவலா்கள் அனிதாகுமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனர்.