நாசரேத் ஆர்ட் பள்ளியில் செய்யப்பட்ட உதிரி பாகங்கள் பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ளது

Nazareth news

நாசரேத் ஆர்ட் பள்ளியில் செய்யப்பட்ட உதிரி பாகங்கள் பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ளது

நாசரேத்,ஆக.27:நாசரேத் ஆர்ட் பள்ளி தொழிற்பயிற்சி மையத்தில் செய்யப்பட்ட உதிரி பாகங்கள் நிலவை ஆய்வு செய்கிற பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

இந்தியாவின் சந்திராயன் -3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் கடந்த 23ம் தேதி தரையிறங்கியது. இந்நிலையில் விக்ரம் லேண்டரில் இருந்து வெற்றிகரமாக பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்நிலையில் சந்திராயன் 3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவரில் லேசர் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய சென்சார் உதிரி பாகங்கள் மற்றும் வேகத்தைக் கட்டுப்படுத்த கூடிய சர்வோ ஆக்ஸிலரோ மீட்டருக்கான உதிரிபாகங்களும் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள ஆர்ட் தொழிற் பயிற்சி மையத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது‌.

இதுகுறித்து நாசரேத் ஆர்ட் தொழில் பயிற்சி மையத்தின் தாளாளர் ஐசக் ராஜதுரை கூறியதாவது, தென் தமிழகத்தின் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் கீழ் செயலாற்றி வருகின்ற நாசரேத் ஆர்ட் தொழிற் பயிற்சி மையத்தில் கடந்த 38 ஆண்டுகளாக விண்வெளி உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது மைக்ரான் அளவுகளில் இயந்திரங்களில் தயாரிக்கப்பட்டு தரக்கட்டுப்பாட்டு துறையில் நுண்ணிய முறையில் அளவீடு செய்யப்பட்டு சிறந்ததொரு உதிரி பாகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. 

தற்போது இந்தியா அனுப்பியுள்ள சந்திராயன் 3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவரில் எங்கள் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள உதிரி பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது‌.

இந்த வாய்ப்பை எங்களுக்கு தந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அதிகாரிகளுக்கு  எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக இரவு பகலாக உழைத்த எங்கள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு கூறினார்.தொடர்ந்து சந்திராயன் 3  விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய வெற்றியைக் கொண்டாடும் வகையில் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.