காத்திருப்போர் பட்டியலில் தினசரி காத்துக்கிடக்கும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் - கூடுதல் ரயில் தேவை
Train News

தூத்துக்குடி - சென்னை இடையே இரவில் இயக்கப்படுகிற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சீட் பெறுவதற்காக காத்திருப்போர் பட்டியலில் தினமும் ஏராளமானோர் காத்திருக்கும் நிலமை இருந்து வருகிறது. எனவே அனைவரும் பயன்பெறும் வகையில் கூடுதல் ரயிலை இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி பயணிகள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் செயலாளர் மா.பிரம்மநாயகம் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில், கொரோனா காலத்திற்கு முன்னர் தூத்துக்குடி-சென்னை இடையே இயக்கப்பட்ட குருவாயூர்-சென்னை லிங்க் எக்ஸ்பிரஸ் தற்போது இயக்கப்படவில்லை. தூத்துக்குடி - சென்னை இடையே தினசரி பயணிப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் தற்போது இரவில் இயக்கப்படும் தூத்துக்குடி-சென்னை முத்துநகர் ரயிலில் எப்போதும் கூட்டம் அலை மோதுகிறது. எப்போதும் காத்திருப்போர் பட்டியல் அதிகமாகவே இருக்கிறது. அதனால் தூத்துக்குடி-சென்னை இடையே கூடுதல் ரயில் இயக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே காலை(பகல்)நேரத்தில் தினசரி ரயிலும், வாரத்தில் மூன்று நாட்கள் இரவு நேரத்தில் தூத்துக்குடி-சென்னை இடையே சிறப்பு ரயில்களையும் இயக்க வேண்டும்
மேலும், தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் (வியாழன், சனி) இயக்கப்படும் தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயிலை கூடுதலாக திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளிலும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.