நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது - ஸ்டெர்லைட் நிறுவனம் அறிக்கை

sterlite news

நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது - ஸ்டெர்லைட் நிறுவனம் அறிக்கை

நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லை காப்பர் உருக்கு ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி நடந்த போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனால் தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், தமிழக அரசின் முடிவு சரியானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனம் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கின் விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதலை அவ்வப்போது புதுப்பித்து செயல்பட்டு வந்தது. கடந்த 22 ஆண்டுகளாக ஆலையின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்துள்ளது. அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையின் செயல்முறைகள், தொழில்நுட்பங்கள் பொருந்தக்கூடிய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் கட்டமைப்புக்குள் செயல்படுவதை உறுதி செய்துள்ளது. எனவே, நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இறுதி விசாரணைக்காகக் காத்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.