முதலமைச்சரின் விரிவாக்க காப்பீடு திட்டத்தில் அடையாள அட்டை வழங்க வேண்டும் - நாசரேத் வணிகர் சங்கம் கோரிக்கை

Nazareth news

முதலமைச்சரின் விரிவாக்க காப்பீடு திட்டத்தில் அடையாள அட்டை வழங்க வேண்டும் - நாசரேத் வணிகர் சங்கம் கோரிக்கை

வணிகர்களுக்கு முதலமைச்சரின் விரிவாக்க காப்பீடு திட்டத்தில் அடையாள அட்டை வழங்க வேண்டும் என நகர வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

நாசரேத் நகர வணிகர் சங்க 23 வது ஆண்டு விழா ஜோதி மஹாலில் நடந்தது. சங்க தலைவர் ஜெபஸ் திலகராஜ் தலைமை வகித்தார். சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் பாபு செல்வன் வரவேற்றார். தொழிலதிபர்  ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். விழாவில்  மாவட்ட துணை இயக்குநர் சுகாதார பணிகளின் நேர் முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள்  கிருஷ்ணராஜ், இரஞ்சன்,  மாமல்லன், தேவதாஸ் ஆகியோர் பேசினர். நாசரேத்தை  தலைமையிடமாக கொண்டு தனி தாலுகாவாக உருவாக்க அரசை கேட்பது எனவும் வணிகர்களுக்கு முதலமைச்சரின் விரிவாக்க காப்பீடு திட்டத்தில் அடையாள அட்டை வழங்குவது எனவும், நாசரேத்  இரயில் நிலையத்தை பொது மக்களின் நலம் கருதி விரிவுப்படுத்தி  எஸ்குலேட்டரை விரைவில் அமைக்க  ரயில்வே நிர்வாகத்தை கேட்பது எனவும் மற்றும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

2023 - 2024ம் ஆண்டிற்கான  புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. ஜெபஸ் திலகராஜ் தலைவராகவும் ஆறுமுகம் துணை தலைவராகவும் செல்வன் செயலாளராகவும்  சித்திக் துணை செயலாளராகவும்  அகிலன் பொருளாளராகவும்  நோவாசாலமோன், ஜெபராஜ், செல்வாஸ் ஆகியோர் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்களாகவும்  ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

முன்னதாக விழாவை முன்னிட்டு வணிகர்களுக்கான இலவச  மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட   துணை இயக்குநர் சுகாதார பணிகளின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் தலைமையில் உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயகுமார், மாவட்ட பயிற்சி குழு மருத்துவ அலுவலர் டாக்டர் ஜோசுவா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், ஞானராஜ்  மற்றும் குழுவினர் வணிகர்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்தனர். இதில் வணிகர்கள் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் செல்வன் நன்றி கூறினார்.