திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா - தற்காலிக உணவுக் கடைகள் உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவுச்சான்றிதழ் பெற வேண்டும்

Thiruchendur Murugan

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா -  தற்காலிக உணவுக் கடைகள் உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவுச்சான்றிதழ் பெற வேண்டும்

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாக்காலத்தின் போது செயல்படவுள்ள தற்காலிக உணவுக் கடைகள், அன்னதானங்கள் உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி விழாவின் போது, தற்காலிக உணவுக் கடைகளும், தனியார் அன்னதானங்களும் அதிக அளவில் நடைபெறவும், நிரந்த ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டகள் மற்றும் தெருவோர உணவு வணிகர்களிடத்தில் அதிக அளவிலான உணவு கையாளப்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், அவ்வணிகர்கள் பின்வரும் உணவு பாதுகாப்பு நிபந்தனைகளைப் பின்பற்றி, தரமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் பக்தர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

அன்னதானங்கள் மற்றும் தற்காலிக உணவுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் தங்களது வணிகத்தினைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். சாப்பாடு போன்ற உடனே உண்ணக்கூடிய உணவுப் பொருட்களை சமைத்து விற்பவர்கள் அல்லது உணவுப் பொருட்களை விற்பனை மட்டும் செய்பவர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு, ஈக்கள் மற்றும் அசுத்தம் இல்லாத சுகாதரமான சுழலில் அவற்றை தயாரித்து, பாதுகாப்பாக விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளை உணவுப் பொருட்களில் சேர்க்கக்கூடாது. சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திடல் வேண்டும். பயன்படுத்தி மீதமான ஆறிய நிலையில் உள்ள எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில் அதன் தயாரிப்பு நாள், காலாவதி நாள், உணவு பாதுகாப்பு உரிமம் எண் உள்ளிட்ட அனைத்து லேபிள் விபரங்களை அவசியம் அச்சிட்டிருக்க வேண்டும். உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் அனைத்துப் பணியாளர்களும் டைஃபாய்டு மற்றும் மஞ்சள்காமாலைக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொண்டு, “தொற்றுநோய்த் தாக்கமற்றவர்களாக” இருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் கையுறை, முடிக் கவசம் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டும். காலாவதியான பிஸ்கட், குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட் எந்தவகை பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. மேலும், கெட்டுப்போன அல்லது பழைய உணவுகளை விற்பனை செய்யக்கூடாது. டைனிங் டேபிள் மற்றும் வளாகத்தினை சுத்தம் செய்யும் நபர்கள் சாப்பாடு பரிமாறக்கூடாது. 

மேலும், விழாக்கால தற்காலிக உணவு வணிகர்கள் மற்றும் அன்னதானம் வழங்குபவர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் காவல் துறையினர் ஆகியோரை இணைத்துக்கொண்டு, அவ்வணிகர்களிடத்தில் குழு ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற அல்லது பாதுகாப்பற்ற உணவுகளைத் தயாரிப்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த அறிக்கையை ஆட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. எனவே, விழாக்கால தற்காலிக உணவு வணிகர்கள் மற்றும் அன்னதானம் வழங்குபவர்கள் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ல் உள்ள உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை மிகுந்த கவனமுடன் பின்பற்ற வேண்டுமாய் எச்சரிக்கப்படுகின்றது.

உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் /பதிவு பெற்ற நிறுவனங்களில் அல்லது அன்னதானங்களில் மட்டுமே பொதுமக்கள் உணவு உண்ணவும் அல்லது உணவுப் பொட்டலங்களை வாங்கவும் வேண்டும் எனவும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களானது, உண்ணத் தகுந்த காலத்திற்குள் இருந்து, போதிய விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மேலும், இது தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கு 0461-2900669 அல்லது 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கு புகார் தெர்விக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.