திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல் : தூத்துக்குடி பிரஸ் கிளப் கண்டனம்

Thoothukudi Press club

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல் : தூத்துக்குடி பிரஸ் கிளப்   கண்டனம்

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தூத்துக்குடி பிரஸ் கிளப், கொலைவெறி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு வலியுறுத்தியுள்ளது. 

இது குறித்து தூத்துக்குடி பிரஸ் கிளப் செயலாளர் அண்ணாதுரை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகாவை சேர்ந்த நியூஸ் 7  தொலைக்காட்சியின் செய்தியாளராக  பணிபுரிந்து வருபவர் நேசபிரபு . இவரை நேற்று (24-01-2023) புதன்கிழமை இரவு , செய்தியாளர் அவரது வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் அவர் வெளியே வந்த நேரம் பார்த்து  கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு  தப்பியுள்ளனர். 

உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் சிக்கிய செய்தியாளர் நேசபிரபுவை காமநாயக்கன்பாளையம் போலீசார்  மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மிகக் கொடூரமாக தாக்குதலுக்குளான செய்தியாளர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கொடூர சம்பவத்தை தூத்துக்குடி பிரஸ் கிளப்  வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த கொடூர செயலில் சம்பந்தப்பட்ட சமுக விரோத கொலைகார கும்பலை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறது.இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.