அரசு பேருந்துகளிலும் டிஜிட்டல் முறையில் பணமில்லா பணப்பரிவர்த்தனை வசதி !

Tnstc news

அரசு பேருந்துகளிலும் டிஜிட்டல் முறையில் பணமில்லா பணப்பரிவர்த்தனை வசதி !

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் பணமில்லா பரிவர்த்தனை தொடங்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் பணமில்லா பரிவர்த்தனையை அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் கூறுகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பயணிகளுக்கு புதிய நவீன வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக, பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணமில்லா பணப்பரிமாற்றம் செய்து பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் முறையை நடைமுறைபடுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை ஸ்வைப் செய்தோ அல்லது கியூஆர் கோடு ஸ்கேன் செய்தோ அல்லது ஜிபே, போன் பே போன்ற பணப் பரிவர்த்தனை செய்தோ பணப்பரிமாற்றம் செய்து பேருந்தில் நடத்துனரிடம் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம். இந்த முறையினால் பயணிகள் அவசரத்தில் பணத்தை எடுத்து செல்லாவிட்டாலும் தைரியமாக பயணம் செய்யலாம். எனவே பொதுமக்கள் வரும் நாட்களில் இந்த முறையில் பேருந்துகளில் டிக்கெட் பெற்று பயன்பெறலாம் என்றார். அப்போது கோட்டமேலாளர் ரமேஷன், நகர கிளை மேலாளர் கார்த்திக். தொமுச கிளைத் தலைவர் லிங்குசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

பணமில்லா பரிவர்த்தனை சேவையை சிறப்பாக மேற்கொண்ட நடத்துனர் ஆபேல் ராஜாமணிக்கு போக்குவரத்து கழக பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் பரிசு வழங்கி பாராட்டினார்.