தொழில் வளர்ச்சி இல்லை.. தென் தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகரித்துள்ளது.. : அண்ணாமலை

BJP Annamalai

தொழில் வளர்ச்சி இல்லை.. தென் தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகரித்துள்ளது.. : அண்ணாமலை

தொழில் வளர்ச்சி இல்லையென்பதால் தென் தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகரித்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் தெரிவித்தார்.

என் மண் என் மக்கள் என்கிற பாதை யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை இன்று(4.09.2023) தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தொடங்குவதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது அவ்வாறு தெரிவித்தார். 

’’கடந்த மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக கிளை தலைவர் குடும்பத்தோடு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழகம் வன்முறை கலாச்சாரமாக மையமாக மாறி உள்ளது. தமிழகத்தில் கந்துவட்டி கொடுமை, கூலிப்படை தாக்குதல் அதிகரித்துள்ளது.லஞ்சம் அதிகரித்துள்ளது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழகத்தில் ஆட்சி செய்யக்கூடிய திமுக கடந்த 30 மாதங்களாக தான் செய்த சாதனைகளை சொல்ல முடியாமல் இந்தியாவில் மணிப்பூரில் கலவரம் மகாராஷ்டிராவில் இன மக்களை சொல்லி குழப்பி வருகிறது. தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்காகவும், பெண்களுக்காகவும், கல்விக்கான வளர்ச்சியை திமுக இதுவரை கண்டு கொள்ளவில்லை.

இந்திய வரலாற்றிலேயே பெண் குழந்தைகளுக்கு அனைத்து பள்ளிகளிலும் தனியாக கழிப்பறை இருக்க வேண்டும் என்று பெருந் திட்டத்தை கொண்டு வந்தது பாரதிய ஜனதா கட்சி. தென் தமிழகம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. ஒரு அபாயகரமான மண்டலமாக காட்சியளித்து வருகிறது. இங்கு முன்னேற்றம் என்பது இல்லை.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் 1 முதல் 2 ட்ரில்லியன் பொருளாதாரம் தென் தமிழகத்தில் உருவாக வேண்டும். ஆனால் அப்படி இல்லாமல் ஜாதி, வன்முறை போன்றவற்றால்  முடங்கி கிடக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை.சென்னையில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகளுக்கு தென் தமிழகத்தின் மீது அக்கறை இல்லை. வருங்காலங்களில் தொழில் வளர்ச்சிக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது அதில் 50 சதவீதம் தென் தமிழகத்தில் வருமாறு அரசு தொலைநோக்கு சிந்தனையோடு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும். தொழில் வளர்ச்சி இல்லையென்பதால் தென் தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகரித்துள்ளது. 

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உதான் திட்டத்தின் மூலமாக தென் தமிழகத்தில் மற்றொரு விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.