ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளுக்காக புதிய நீர் வழி திட்டம் - மோகன் சி லாசரஸ் கோரிக்கை

Nalumavadi

ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், சாத்தான்குளம், உடன்குடி  பகுதிகளுக்காக புதிய நீர் வழி திட்டம் - மோகன் சி லாசரஸ் கோரிக்கை

ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், சாத்தான்குளம், உடன்குடி  பகுதிகளுக்காக புதிய நீர் வழி திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நாலுமாவடி ஏசு விடுவிக்கிறார் ஊழியம் மற்றும் புதுவாழ்வு சங்க  ஸ்தாபகரமான சகோதரர் மோகன் சி லாசரஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.   

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள பேய்குளம் எனும் குளத்திலிருந்து விவசாயிகளின் பாசனத்திற்கு செல்லும் மூன்று பாசன வாய்க்கால் தூர் வாரும் பணியை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவி செய்து சகோதரர் மோகன் சி லாசரஸ்  கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

முன்னதாக அப்பகுதியில் உள்ள பேய்குளம் பாசன வாய்க்கால் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் சங்கத்திற்கு வருகை தந்த சகோதரருக்கு பூங்கொத்து, பழங்கள், கொடுத்து சால்வைகள் அணிவித்து  விவசாயிகள் சார்பில் அனைத்து விவசாயிகள் சார்பாக உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து வாய்க்கால் வாரும் இடத்திற்கு சென்று தூர்வாரும் பணியினை கொடி அசைத்து நாலுமாவடி ஏசு விடுவிக்கிறார் ஊழியம் மற்றும் புதுவாழ்வு சங்க  ஸ்தாபகரமான சகோதரர் மோகன் சி லாசரஸ் வாய்க்கால் தூர் வாரும் பணியை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சத்தியம் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த  நேர்காணலில், இந்த விவசாய சங்கம் ஆனது 1872 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 154 வருடங்களாக  ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகின்ற சிறப்பான விவசாய சங்கமாக செயல்பட்டு வருகிறது.

இதனால் விவசாயிகளுக்கு தேவையான பல காரியங்களை அவர்களே செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு தேவையான ஒரு சின்ன உதவி செய்வதற்கு நான் இங்கு வந்துள்ளேன். இவர்கள் செய்கிற காரியங்களை பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இதுபோல விவசாய அந்த சங்கங்களை நாம்  உற்சாகப்படுத்தினாலே அவர்கள் எழுந்து பல விஷயங்களை செய்வார்கள்.

விவசாயிகள் ஆசீர்வாதமாக இருந்தால் தேசம் ஆசீர்வாதமாக இருக்கும். முக்கியமாக இந்த தாமிரபரணி வற்றாத ஜீவநதி இந்த நதியின் மூலம் தென்காசி , திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாயம் போன்றவற்றுக்கு பெரிதும் பயன்பெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் உருவாகி தமிழ்நாட்டில் கடலில் கலக்கிற ஒரு அற்புதமான ஆசீர்வாதமான நதி. இந்த தாமிரபரணியில் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. அரசாங்கம் புதிய நல்ல பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படியே இந்த தாமிரபரணி ஆற்றின் வெள்ள காலங்களில் தூத்துக்குடியின் வடபகுதியில் புதிய நீர் வழித்தடத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி பகுதிகளோடு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் போன்ற பகுதிகளும் பயன்படும்.

அதே போல் தென்பகுதியில் சாத்தான்குளம், உடன்குடி, குலசேகரப்பட்டினம் அந்த போன்ற பகுதிகள் பயன் வரும் வகையில் புதிய நீர் வழி திட்டத்தையும் தாமிரபரணியில் இருந்து ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனால் இப்பகுதியில் பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலங்கள் விவசாய நிலமாக மாறுவதற்கு வாய்ப்பாக அமையும்  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கான திட்டங்கள் வகுத்துள்ளதாக கேள்விப்படுகிறேன் இவற்றை துரிதப்படுத்தி சீக்கிரமாக செயல்படுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆசீர்வதிக்கபடவும், லட்சக்கணக்கான தரிசு நிலங்கள் மற்றும் விவசாய  நிலங்கள் ஆசீர்வாதமாக மாறும். இதை அரசாங்கத்திற்கு விண்ணப்பமாக  வைக்கிறோம். தாமிரபரணி தண்ணீர் வீணாகாதபடி சரியானபடி சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியின் போது, பேய்குளம் நிலச் சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி தலைவர் குணசேகரன், செயலாளர் ஜெய பொன்ராஜ், பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் புது வாழ்வு சங்க ஒருங்கிணைப்பாளர் எட்வின், ஏசு விடுகிறார் ஊழியத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மேலாளர் செல்வகுமார் சிறப்பாக செய்திருந்தார்.