தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2023-24ம் நிதியாண்டின் 3வது காலாண்டில் ரூ.284 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது

Tmb

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2023-24ம் நிதியாண்டின் 3வது  காலாண்டில் ரூ.284 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2023-24ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.284 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது என்றும், நிகர வட்டி வருமானம் ரூ.537 கோடி என்றும் வங்கியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் நேற்று தூத்துக்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2023-24ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கை இறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் மூன்றாவது காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு 1921ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, தற்போது நாடு முழுவதும் 12 மண்டல அலுவலகங்களுடன் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 547 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. சுமார் 5 மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். 2023-24ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 8.87 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.85,185 கோடியை எட்டியுள்ளது. வங்கியின் வைப்புத் தொகை ரூ.46,799 கோடி மற்றும் கடன் தொகை ரூ.38,386 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. வங்கியின் நிகர மதிப்பு ரூ.6,741கோடியில் இருந்து ரூ.7,668 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் நிகர லாபம் ரூ.280 கோடியில் இருந்து, ரூ.284 கோடியாக உயர்ந்துள்ளது. இது வங்கியில் இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச காலாண்டு நிகர லாபம் ஆகும். நிகர வட்டி வருமானம் ரூ.537 கோடியை எட்டியுள்ளது. வங்கியின் மொத்த வருமானம் ரூ.1,173 கோடியில் இருந்து ரூ.1,387 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த வராக்கடன் 1.70 சதவீதத்தில் இருந்து 1.69 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குகளின் புத்தக மதிப்பு ரூ.426-ல் இருந்து ரூ.484 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் முன்னுரிமை துறைகளுக்கு வழங்கிய கடன் ரூ.25,636 கோடியில் இருந்து ரூ.28,725 கோடியாக அதிகரித்துள்ளது. இது 12.05 சதவீத வளர்ச்சியாகும். முன்னுரிமை துறைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 40 சதவீதம் என்ற இலக்கை தாண்டி 75 சதவீதம் அளவுக்கு கடன்  வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலாண்டில் விவசாய துறைக்கு ரூ.13,338 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாய துறைக்கு மொத்த கடனில் 18 சதவீதம் மட்டுமே வழங்க ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் 34.75 சதவீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ.12,870 கோடியில் இருந்து ரூ.13,064 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த காலாண்டில் 6 புதிய கிளைகளை திறந்துள்ளோம். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தொடர்ந்து அனைத்து பிரிவுகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. வங்கி சேவையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு எடுத்த முடிவை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியும் செயல்படுத்தும் என்றார்.

பேட்டியின்போது, வங்கியின் தலைமை நிதி அலுவலர் பி.ஏ.கிருஷ்ணன், பொதுமேலாளர்கள் இன்பமணி, சூர்யராஜ், சுந்தரேஷ்குமார், ரமேஷ், ஜெயராமன் மற்றும் துணை பொதுமேலாளர்கள், வங்கியின் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.