தூத்துக்குடியில் மின்கம்பம் உடைந்து விழுந்து வாலிபர் பலி

accident

தூத்துக்குடியில் மின்கம்பம் உடைந்து விழுந்து வாலிபர் பலி

தூத்துக்குடியில் மின்கம்பம் உடைந்து விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அண்ணாநகர் 9வது தெருவை சேர்ந்தவர் பெத்துராஜ் மகன் பெத்துகுமார்(26). இவர் மின்வாரிய லைன்மேன் ஒருவருக்கு உதவியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காலை தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி பின்புறம் உள்ள காமராஜ்நகர் பகுதியில் மின்சாரம் தடை ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் பழுது நீக்குவதற்காக லைன்மேனுடன் பெத்துகுமார் சென்று உள்ளார். அவர், அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறி பழுதுநீக்கும் பணியை மேற்கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மின்கம்பம் உடைந்து, கீழே விழுந்தது. அந்த மின்கம்பத்தின் அடியில் பெத்துகுமார் சிக்கி கொண்டதால் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பெத்துகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெத்துகுமார் ஏறிய மின்கம்பம் ஏற்கனவே அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு பழுதாகி இருந்ததாகவும், மின்கம்பத்தை பிடித்து இழுத்து வைக்கும் ஸ்டே கம்பியும் இல்லாமல் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்று பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சேதமாகியும், ஸ்டே கம்பியும் இல்லாமல் இருப்பதாகவும், இவை அனைத்தையும் மின்வாரியம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.